தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சி.பி.ஐ., தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.






இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரும்  நேரில் ஆஜராகினர்.  இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.




 

அதில் அவர் சாத்தான்குளம் போலீஸார் வழக்கமாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலவே, சும்மா விசாரணைக்காக அழைத்து வந்து அனைவரையும் அடித்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பதை நீதிபதி முன்னர் சாட்சியமாக பதிவு செய்தார். அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவலர்களின் வழக்கறிஞர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து எதிரிகள் தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வழக்கின் விசாரணை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது