ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா துறை சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரையும் அவதூறு பரப்பும் நோக்கில் குறிப்பிட்ட பெயரை சொல்லி ஹேமா கமிட்டி சொல்லவில்லை - நடிகர் சரத்குமார்

 

மீடூ இயக்கத்திற்குப் பிறகு அடுத்தபடியாக மலையாள சினிமாத் துறையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, ஹேமா கமிட்டியின் அறிக்கை. பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரள அரசு நீதிபதி ஹேமா தலைமையில் இந்த கமிட்டியை உருவாக்கியது. பல்வேறு நடிகைகளின் வாக்குமூலங்களைப் பெற்று சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கை பல வருடங்களாக கிடப்பில் இருந்தது. தற்போது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பின் இந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் நீங்கலாக பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளாரா இல்லை என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களின் கடமை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

நிரூபிக்கப்பட வேண்டியது நமது கடமை

 

பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீனிவாசனின் 61 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை, மத்திய அரசின் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத்குமார்," ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா துறை சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரையும் அவதூறு பரப்பும் நோக்கில் குறிப்பிட்ட பெயரை சொல்லி ஹேமா கமிட்டி சொல்லவில்லை. கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளனரா இல்லை என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களின் கடமை. 

 


 

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

 

நிர்பயா கொலை வழக்கு, கொல்கத்தா சம்பவம்  போன்ற நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்று நடக்கின்றது. எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"  என்ற எம்.ஜி. ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. பிறர் என்ன செய்தார்கள் என்று யோசிப்பதே விட நாம் நம் மக்களை எவ்வாறு சீர்படுத்தி கொள்ள வேண்டும். எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி தான் நான் நினைப்பேன். என் மனைவி ஏன் அன்று சொல்லவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். என் மனைவிக்கு கடந்து போக கூடிய சக்தி இருந்ததால் அவர் அன்று சொல்லாமல் இருந்திருக்கலாம். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது, என்று தெரிந்தால் தான்  இதை திருத்த முடியும். பிக்பாஸ் நடிகை யாரும் என்னிடம் புகார் கொடுத்தது கிடையாது. மற்றவர்களை போல் சாதாரண தலைவன் கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது" என்றார்.