உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


மதுரை ஜல்லிக்கட்டு


தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.


- ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி




ஜல்லிக்கட்டில் நெகிழ்ச்சி 

மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள  பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்  தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.





அதிகாரிகள் ஆய்வு

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் காலம் தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜக்கம்மாள் கோவிலை 400 ஆண்டுக்கு பின் புரணமைப்பு செய்து ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவையும், ஜல்லிக்கட்டு போட்டியையும் நடத்த திட்டமிட்டு வரும் பிப்ரவரி 11-ம் தேதி ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவும், 12ஆம் தேதி பழமை மாறாமல் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு மற்றும் வட்டாச்சியர் சுரேஷ் தலைமையிலான அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்ட உள்ள காளைகள் வாகனங்களில் கொண்டு வருவதற்கான பாதைகள், காளைகள் பரிசோதனை மையம் மற்றும் மாடுபிடு வீரர்கள் பரிசோதனை மையம், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை மையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலில் அடிப்படையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் மற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு விழா குழுவினருக்கு அரசு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.