உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கினர். 

 

மதுரை ஜல்லிக்கட்டு


தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.




மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள  பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தொட்டப்பநாயக்கணூர் ஜல்லிக்கட்டு

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில் ஜமீன் காலம் முதலே ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி 11-ம் தேதி ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழாவுடன் 12 -ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினர் தீர்மானித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.




 

சுமார் 18 கிராம மக்கள் ஒன்றி திரண்டு நடத்தும் இந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முதற்கட்டமாக செட்டியபட்டி, நோட்டம்பட்டி, வாசிநகர், குன்னுத்துபட்டி மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் உள்ளிட்ட 8 கிராம மக்கள் சாதி மத பேதமின்றி ஒன்றிணைந்தும், அதிமுகவைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு குழு நிர்வாகியும் இணைந்து சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கிராம மக்களின் நிதியாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் வாரிசுதாரர்களிடம் வழங்கினர்.



 

தொடர்ந்து அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 11-ம் தேதி ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 12 ஆம் தேதி பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டியை வெகுவிமர்சையாக நடத்த ஆலோசனை செய்யப்பட்டது.