அமைச்சர் மா.சுப்பிரமணியன்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத் துறை கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் முதல் நாள் இரவே பரமக்குடியில் தனியார் விடுதியில் வந்து தங்கினார். பரமக்குடி அருகே முத்துவயல், காமன்கோட்டை கிராமங்களில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஜாக்கிங் சென்றார். தொடர்ந்து போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த வருகை பதிவேடு, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  இருதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்று பயனடைந்த ஒரு பயனாளியை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். 


- Petrol Bomb Attack: "எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு" சேலத்தில் பரபரப்பு..!


சி.டி ஸ்கேன்  அறையா அல்லது குடோவுனா?


போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு இல்லாமல் 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து  போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை பாராட்டும் விதமாக செவிலியர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். தொடர்ந்து பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.  பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்த சிடி ஸ்கேன் அரங்கில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அங்கு இருந்த ஊழியர்களிடம் சிடி ஸ்கேன்  அறையா அல்லது குடோவுனா என கேள்வி எழுப்பினார்.


15 வருடம் ஆனாலும் கட்ட மாட்டீர்கள்


பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை 47 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் தொடங்கி ஒன்றரை வருடம் ஆன நிலையில் தரை தளத்திலேயே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது புதிய கட்டிடம் கட்டுமானம் தொடங்கப்பட்டு ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. ஏன் தாமதமாக நடைபெறுகிறது எனவும், ஒன்றரை வருடத்தில் தரைதளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 15 வருடம் ஆனாலும் கட்ட மாட்டீர்கள், ஒப்பந்ததாரரை மாற்றுங்கள் என அதிகாரியைக் கடிந்து பேசினார். பரமக்குடி மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்துள்ளது. இதை அகற்றாதது குறித்து அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் அகற்றுமாறு பேசினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் பெண் கொலையில் 25 நாள் தேடுதலில் சிக்கிய கொலையாளி - துப்புக்கொடுத்த பட்டன் செல்போன்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kamalhassan Not In Bigboss : பிக்பாஸ் தொகுத்து வழங்க முடியாது.. ஷாக் கொடுத்த கமல்.. என்னாச்சு..?