சென்னை சகஜ நிலைமைக்கு திரும்புவதால் வழக்கமான ரயில் போக்குவரத்து துவக்கம்


சென்னையில் வரலாறு காணாத கனமழை


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது. 


- பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மனு கொடுக்க வந்த ஆட்டோ டிரைவர் - தேனியில் பரபரப்பு




மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பது, முகாம்களுக்கு கொண்டு செல்வது, தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது, அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுமுனையில், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, சாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது, மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் சென்னை லேசாக சகஜ நிலைமைக்கு திருப்புவதால் வழக்கமான ரயில் போக்குவரத்து துவக்க திட்டமிடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.





புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்தும் மீண்டும் இன்று  துவங்கி இருக்கிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) காலை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) செவ்வாய் இரவு விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. இருந்த போதிலும் திங்களன்று சில ரயில்கள் சென்று சேரும் ரயில் நிலையங்களுக்கு வந்து சேராததால், மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635),  காரைக்குடி - சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12606/12605), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691), திருவாரூர் வழி தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20693), செங்கோட்டை வழி சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), தஞ்சாவூர் வழி சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751), போடிநாயக்கனூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (20602) ஆகியவை செவ்வாய்க்கிழமை அன்றும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.



 

மற்ற ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.

 

ஆந்திராவில் நிலவும் புயல், வெள்ளம் காரணமாக டிசம்பர் 4 அன்று புறப்பட்ட டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) மற்றும் டிசம்பர் 3 அன்று புறப்பட்ட பிகானீர் - மதுரை எக்ஸ்பிரஸ் (22632) ஆகியவை குண்டூர், நந்தியால், யெர்ரகுண்டலா, ரேணிகுண்டா, காட்பாடி, விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.


 

மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா