கொரோனா இரண்டாவது அலை ஓரளவு குறைந்தது. இருப்பினும் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பல்வேறு நாடுகளும் கொரோனா மூன்றாவது அலைக்கு எதிராக போராடா தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு பல்வேறு உயிர்களை காவு கொடுத்துள்ளோம் என்பது கசப்பான உண்மை.

 


 


 

 

மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 401 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68324 ஆக உயர்ந்தது. அதே போல் நேற்று 1164 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 56677 அதிகரித்துள்ளது. அதே போல் நேற்று மட்டும் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரையில் இறப்பு எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 10666 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுக்கு சொந்தமான தத்தனேரி, கீரத்துறை (மூலக்கரை) ஆகிய மின்மயானங்களில் மட்டுமே எரியூட்டப்படுகிறது.

 


அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் உடல்களும் எரியூட்டப்படுவதால் மயானங்களில் அனைத்தும் சடல்கள் அடுக்கிவைக்கப்படும் சூழல் எற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து கொரோனா உடல்கள் மதுரை வருவது பொதுமக்களை அச்சமடைய செய்தது. எனவே இறந்தவர்களின் உடலை அந்தந்த பகுதிகளிலேயே உடல்களை எரியூட்டும் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும். ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்ட மின்மயானங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. குறிப்பாக மேலூர் பட்டாளம் கண்மாய் அருகே உள்ள மின்வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து “ ABP Nadu Exclusive: ஒருபக்கம் சடலங்கள் குவியுது; இன்னொரு பக்கம் திறக்கவே இல்ல! தமிழக மயான கொடுமை! ” என்ற தலைப்பில் ABP Nadu செய்தி தளத்தில் விரிவான செய்தி வெளியிட்டோம். மேலூர் நகராட்சி ஆணையர் பாலமுருகனும் நம்மிடம் விரைவாக திறக்க ஏற்பாடு செய்ய உள்ளதாக நம்பிக்கை தெரித்திருந்தார். இந்நிலையில் மேலூர் மின்வசதியுடன் கூடிய எரிவாயு தகனம் செயல்பட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 



 

இது குறித்து சமூக ஆர்வலர் ப.ஸ்டாலின்...." மதுரையில் கொரோனா இரண்டாவது அலை உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. தத்தனேரி மற்றும் கீரத்துறை மயானங்களில் தலா 2 மின்மயானங்கள் மட்டுமே செயல்பட்டது. இதனால் தந்தனேரி சுடுகாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் உடலை எரியூட்ட 3 கூடுதல் எரியூட்டிகளை ஏற்படுத்தி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் உடல்களை விரைவாக எரியூட்ட முடியும். அதே சமயம் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின்மயானம் பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது அதனையும் சரி செய்தால் உடல்கள் தேக்கமடையாமல் இருக்கும் என்பது போல் கோரிக்கை விடுத்திருந்தேன். மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாட்டில் 2012 -13 மின்வசதியுடன் கூடிய எரிவாயு மயானம் கட்டிமுடிக்கப்பட்டது. 60 லட்சம் செலவில் மின்பயன்பாடு மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டது. 

 



அங்கு தரமற்ற எரியூட்டும் இயந்திரம் பொருத்தப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்றது. ஆனால் அந்த உடல் முழுமையாக எரியூட்டப்படாததால்   அதற்கு பின் பயன்பாட்டிற்கு வரவில்லை. 2019-ல் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பயன்பாட்டிற்கு கொண்டுவருதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. இந்நிலையில் Abp nadu செய்தியில் இது தொடர்பான செய்தி வெளிட்டது கவனம் பெற்றது. இதனை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மேலூர் நகராட்சியின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். இந்நிலையில் மேலூர் நகராட்சி ஆணையரின் முயற்சியாலும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு காரணமாக மேலூர் எரிவாயு மயானம் திறக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுவந்த நிலையில் மயானத்தை திறந்து பயன்பாட்டிகு கொண்டுவந்தது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.