கொரோனா சமயத்தில் புதிய மின்மயானங்களை உருவாக்கும் அதே சமயத்தில் ஏற்கனவே இருக்கும் மின்மயானங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 




 


கொரோனாவின் கொடூர தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளை காப்பாற்றிக் கொண்டிருக்கும் வேலையில் மற்றொரு புறம்  கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை விரைவாக எரியூட்ட முடியாமல் காத்துக் கிடக்கும் அவலம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தென் மாவட்டத்தில் மதுரையில் கொரோனா காரணமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுக்கு சொந்தமான தத்தனேரி, கீரத்துறை (மூலக்கரை) ஆகிய மின்மயானங்களில் மட்டுமே எரியூட்டப்படுகிறது.




அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் உடல்களும் எரியூட்டப்படுவதால் மயானங்கள் அனைத்திலும் சடலங்கள் அடுக்கிவைக்கப்படுகின்றன. தொடர்ந்து உடல்கள் வந்துகொண்டே இருப்பதால் எரியூட்ட முடியாத சூழலில் உடல்களை அரசு மருத்துவமனை பிணவறையிலும் வைக்க முடியாத அளவிற்கு குவிந்துவருகின்றது. இதனிடையே மதுரை கீரத்துறை மின்மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஒரே நேரத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாத மின் மயானங்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


 




இது குறித்து சமூக ஆர்வலர் ப.ஸ்டாலின் கூறுகையில், " மதுரையில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தத்தனேரி மற்றும் கீரத்துறை மயானங்களில் தலா 2 மின்மயானங்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் தந்தனேரி சுடுகாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் உடலை எரியூட்ட 3 கூடுதல் எரியூட்டிகளை ஏற்படுத்த உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உடல்களை விரைவாக எரியூட்ட முடியும். அதே சமயம் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின்மயானம் பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது அதனையும் சரி செய்தால் உடல்கள் தேக்கமடையாமல் இருக்கும். குறிப்பாக மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாட்டில் 2012 -13 மின்மயானம் கட்டிமுடிக்கப்பட்டது. 60 லட்சம் செலவில் மின்பயன்பாடு மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டது. அங்கு தரமற்ற எரியூட்டும் இயந்திரம் பொருத்தப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்றது.




 


ஆனால் அந்த உடல் முழுமையாக எரியூட்டப்படாததால்   அதற்கு பின் பயன்பாட்டிற்கு வரவில்லை. 2019-ல் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது பயன்பாட்டிற்கு கொண்டுவருதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. தரமற்ற இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படையாக சொன்னால் தவறுகள் வெளியே தெரிந்துவிடும் என இதனை மூடி மறைக்கின்றனர். இது போன்று பல இடங்களில் மின்மயானங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசின் பணம் வீணாவதோடு, பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல்வேறு இடங்களில் செயல்படாமல் இருக்கும் மின்மாயனங்களை அரசு கவனித்தால் தத்தந்நேரி மற்றும் கீரத்துறை போன்ற பெரும் மயானங்களில் உடல்கள் எரியூட்ட காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது" என்றார்.




 


மேலூர் மின்மயானம் பிரச்னை குறித்து மேலூர் எம்.எல்.ஏ., பெரியபுள்ளானிடம் கேட்டபோது....," இது குறித்து மேலூர் நகராட்சி ஆணையரிடம் சொல்கிறேன். விரைவில் திறக்க ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.


மேலும் இது குறித்து மேலூர் நகராட்சி ஆணையர் பாலமுருகன் நம்மிடம் பேசுகையில்," மேலூர் நகராட்சி மின்மயானம் நல்ல நிலையில் தான் உள்ளது. உள்ளே இருக்கும் இயந்திரங்களும் ரன்னிங் கண்டிசனில் தான் உள்ளது. இதனை தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மக்கள் மின்மயானத்தில் எரியூட்ட முன்வராவல் வெளியிடங்களிலிலேயே எரியூட்டுகின்றனர். வரும் 25 தேதி அனைத்து கட்சி கூட்டம் போல் நடத்தி அந்த மயானத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி எடுக்கிறோம் என்று நம்பிக்கை" தெரிவித்தார்.


இது ஏதோ மதுரைக்கானது மட்டுமல்ல. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளிலும் மயானங்கள் பல கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமலேயே உள்ளது. அவற்றை இனியாவது பயன்படுத்துங்கள். சடலங்கள் காத்திருப்பதை தவிருங்கள்!