உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறங்கி சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உசிலம்பட்டி நகராட்சியில் சாக்கடை


மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்கள் சந்துக்கும் இடமாக மதுரை உசிலம்பட்டி உள்ளது. இதனால் உசிலம்பட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள இடங்களில் சாக்கடை வீசி வெளியேறுகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாமல் பணியாளர்கள் வேலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

தொடர்ந்து புகார் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்


 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மதுரை ரோட்டில் உள்ள 5, 6, 7, 8, 9 உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட வார்டு பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் கால்வாய் மூலம் கொங்கபட்டி ஊரணியில் சென்று தேங்கி வருகிறது. முறையான வடிகால் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது கொங்கபட்டி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையோரம் ஆறாக ஓடும் சூழல் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக வழக்கம் போல் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையோரம் ஆறாக செல்லும் நிலையில், இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 

நோய் தொற்று பரவும் அபாயம்


இந்நிலையில், கொங்கபட்டி தனியார் பெட்ரோல் பல்க் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில், அடைப்பை சரி செய்ய பல்க் நிறுவனத்தார் சொல்லியுள்ளனர். உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களை இறக்கி, சாக்கடை கால்வாயில் இருந்த அடைப்பை சரி செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவும் அபாய நிலையில் உள்ள சாக்கடை கால்வாயில். மனிதர்களை இறக்கி, சுத்தம் செய்ய வைத்த பல்க் நிறுவனத்தினர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும், சாக்கடை கால்வாயை சரி செய்வதில் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரிடையே உள்ள குளறுபடியை சரி செய்து, சாக்கடை கால்வாயை முறைபடுத்த வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்


 

மேலும் இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், "மதுரை மாவட்டம் வறட்சியான பகுதியாக பார்க்கப்படுகிறது. இதைத் தாண்டி விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் சில இடங்களில் கண்மாய், குளங்களில் சாக்கடை கலப்பது வேதனை அளிக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்றனர்.