ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என பேசியிருந்தார். 






இதற்கு அருந்ததியினர் சமூகத்தினர் எதிர்ப்புகளை தெரிவித்துவந்த நிலையில் அருந்ததியர் குறித்த சீமானின்  பேச்சை கண்டித்து  தமிழ்புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவப்பொம்மையை எரித்தவாறு சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்று கைது செய்தனர். 



 

முன்னதாக சீமானின் உருவப்பொம்மை எரிப்பு போராட்டத்தை தடுத்து நிறுத்தி உருவப்பொம்மையை பறிக்க முயன்றதால் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் இடையே கடும் தள்ளுமுள்ளு - வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீமானின் உருவப்பொம்மையை எரித்த தமிழ்புலிகள் அமைப்பினரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர்.



மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்துவரும் நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே சீமானின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.