பசுமை வாசம் வீசும் கிராமம்தான் அரிட்டாபட்டி. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி. கழிஞ்சான் மலை, ஆப்டான் மலை, தேன் கூடுமலை என 7 மலைகள் சூழ்ந்த அழகிய கிராமம். மலை வளமும், நீர் வளமும்  நிறைந்து காணப்படுவதால் பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ளது.

 

மலையை சுற்றி ஊற்றுகளும், கண்மாய்களும் நிறைந்து இருந்தாலும் குடிக்க தர்மக்குளம்தான்.



 

"தர்மத்த பார்த்து கையெடுத்து கும்பிடும் கிராம மக்கள், யாரையும் அசுத்தம் செய்ய விடமாட்டாங்க. கோடையிலும் வற்றாத தர்மக்குளம் தான் இப்பகுதி மக்களுக்கு மினரல் வாட்டர். அள்ளிக்குடிச்சா அவ்வளவு ருசியா இருக்கும். நாள் முழுக்க களைப்பு தெரியாம இருக்க, காரணம் தர்மக்குளத்து நீர்தான்" என பெருமையா தெரிவிக்கின்றனர், கிராமவாசிகள்.

 

தர்மக்குளம் குறித்து பக்கத்து கிராமவாசிகள் கூட "அதன் அழகைச்சொல்லி கும்மி பாட்டு பாடுவாங்களாம். கிராம மக்களின் குல தெய்வ வழிபாடுக்கு தர்மக்குள நீரத்தான் தீர்த்தமாக கொண்டு செல்வாங்க.



அரிட்டாபட்டிக்கு திருமணமாகி வரும் பெண் திருமணத்திற்கு அடுத்த நாள் காலையில் தர்மக்குளத்தில் தண்ணீர் எடுக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் எடுத்து சமைத்தால் நல்லபடியாக வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி தர்மக்குளம் கிராமத்தின் குடிநீர் தேவைக்கும், ஆன்மீக பயன்பாட்டிற்கு பாரம்பரியமாக பயன்பட்டு வருவது முக்கியமான ஒன்று. அதனால்தான் ஆண்டுகள் கடந்து குளத்தை கிராம மக்கள் பயபக்தியாக பாதுகாத்து வருகின்றனர்.




தர்மக்குளம் குறித்து அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் நம்மிடம், ”எங்கள் கிராமம் பசுமையான கிராமம் என சொல்வதற்கு இங்கு வாழும் பறவைகளும், பல்லுயிர் பெருக்கம்தான் காரணம். மலையை சார்ந்து மரங்கள், நீர்நிலைகள், விலங்குகள், மக்கள் என அனைவரும் ஒன்றோடு, ஒன்றாக இசைந்து வாழ்கிறோம்.

 

எங்கள் கிராமத்தில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் கூட கிடைக்கும். நாட்டு வகை மீன்கள், கோழிக்கொண்டை பூக்கள் என கிராமமே அழகு சூழ்ந்தது. அதுபோக தொல்லியல் இடங்களும் உள்ளது. மதுரை கலாச்சாரத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறோம்.



இதில் ஒரு அழகிய அங்கம்தான் தர்மக்குளம். எங்கள் பகுதி குடிநீர் தர்மகுளம். இதனை மக்கள் தெய்வமாக பார்ப்பதால்தான் அழகை குறைத்துக் கொள்ளாமல் என்றும் செழிப்பாக உள்ளது. எத்தனை கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் தர்மத்தில் தண்ணீர் குறையாது. மலை அடிவாரத்தில் உள்ளதால் தொடர்ந்து ஊற்றாக செயல்படுகிறது. காலையில் எழுந்து தர்மத்தை பார்த்தால்தான் பலருக்கும் பொழுது நல்ல பொழுதாகும். தர்மத்தின் கரையில் இருந்து கண்குளிர பார்த்தாலே உடம்பு சூடே குறைந்ததுபோல இருக்கும். அந்த அளவிற்கு தர்மக்குளம் சுற்றி குளிர்ச்சி இருக்கும்.

 

எங்கள் கிராமத்தில் தர்மக்குளம் இருப்பது மிகப்பெரும் வரமாக கருதுகிறோம்” என்றார்  பெருமையாக...