மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்க டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நேரில்  நோட்டீஸ் வழங்கியுள்ளது.

 

மதுரை வழக்கில் டி.டி.எஃப் வாசன்


 

டி.டி.எஃப் வாசன் என்ற பிரபல யூடியூபர் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார். தன்னுடைய பைக் ஓட்டும் திறமையை கொண்டும், அவரது வசீகர பேச்சாலும் மிகப்பெரும் இளைஞர் படையை ரசிகர்களாக  கொண்டுள்ளார். சினிமா பிரபலங்களைப் போல் செல்லும் இடமெல்லாம் வரவேற்புகளை பெற்று வருகிறார். ஆனால் இவரது செயல்பாடுகளால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லக் கூடும் என பல்வேறு விமர்சனங்களும் உள்ளது. அதே சமயம் வேகமாக பைக் ஓட்டும் போது விபத்தில் சிக்கிய வாசன் 10 ஆண்டுகள் பைக் ஓட்டக் கூடாது என நீதிமன்றம் தடை வித்துள்ளது. இதனால் அடிக்கடி வழக்கு வாங்கும் நபர் என்று டி.டி.எஃப் வாசன் கிண்டல் அடிக்கப்படுகிறார். நீதிமன்றம் பைக் ஓட்ட தடையால் தற்போது கார் மூலம் ஊர் சுற்றி வரும் வாசன், தற்போது மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்க டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

 

காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட டி.டி.எஃப் வாசன்


 

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு மே 15-ம் தேதி டி.டி.எஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை அண்ணாநகர் காவல் துறையினர் டி.டி.எஃப் வாசனை கைது செய்து, அவரது காரை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது. மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம். இதில், “10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என, உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார்.

 

போட்டோ எடுக்க கெஞ்சிய ரசிகர்கள்


 

அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென, காவல்துறையினர் நேரில் நோட்டீஸ் வழங்கினார்கள். அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எஃப் வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, டி.டி.எஃப் வாசனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கெஞ்சினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டாம் என டி.டி.எஃப் வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தல் செய்தனர்.