பிரியாணி திருவிழா

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இங்குள்ள  ஸ்ரீ முனியாண்டி சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவின் போது மணக்க, மணக்க பல அண்டாக்களில் அசைவ பிரியாணி செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். இந்தாண்டு 89-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில்  பக்தர்களுக்கு சுவையான பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து பிரியாணி பிரசாதத்தை மகிழ்ச்சியோடு பெற்றுச் சென்றனர்.



 

வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி

 

மதுரை கள்ளிக்குடிக்கு அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் துடியானது. முழு உருவ சிலை உள்ள ஒரே முனியாண்டி கோவில் இதுதான் என சொல்லப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள முனியாண்டி விலாஸ்  ஹோட்டல் உரிமையாளர்களால் கொண்டாடப்படும் இந்த திருவிழா பாரம்பரியமிக்கது.



 

பாரம்பரியம்

 

ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர். இந்நிலையில் நேற்று காலை விரதமேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.  நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமிதரிசனம் செய்தனர். 



 

அண்டாக்களில்  மணக்கும் பிரியாணி

 

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200-ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல் மற்றும் கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி இருபதுக்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.



 

அதிகாலையில் பிரியாணி

 

தொடர்ந்து, பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர்,  அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர். இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.