தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர வலியுறுத்தி அய்யாகண்ணு 2 வாரங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


”உச்சநீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரை பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். காவிரி நீரை தர முடியாது என கர்நாடகா சொல்வதை ஏற்க முடியாது. 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிநீர் தேவை என்ற போர்வையில் விவசாயிகளின் நலனை பறிக்கும் கர்நாடகாவின் எந்த செயலையும் தமிழக அரசு ஏற்காது. காவிரி நீர் தர முடியாது என கர்நாடகா கூறுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” என துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலரும் கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.





இந்நிலையில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாகண்ணு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தி வருகின்றோம். இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க மறுப்பதால், தமிழக அணைகளில் உரிய நீரின்றி சாகுபடி செய்யப்பட்டிருந்த குருவைப் பயிர்கள் முற்றிலுமாக கருகிப் போய்விட்டன. 

 



 

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை என்பதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய  தண்ணீரையும் கர்நாடகா இன்னும் வழங்கவில்லை. கர்நாடகா அரசு தண்ணீர் தர வலியுறுத்தியும், திருச்சியில் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையிலும் மேலும் 4 வாரங்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி தரக்கோரியும், போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.



 

இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு வாரங்கள் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து, போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.