மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 82 நாட்களுக்கு பின்னர் தொடங்கிய குறைதீர் முகாம் - ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிப்பதற்காக வருகை - காவல்துறையினரின் கடும் சோதனைக்கு பின்னர் அனுமதி - குறைதீர் கூட்டத்திற்கு கலந்துகொள்ளாமல் தவிர்த்த துறை அதிகாரிகளை எச்சரித்த மாவட்ட ஆட்சியர். 

 

தேர்தல் 2024

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் அன்று குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள் கடந்த மார்ச் 16-ம் தேதியன்று வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. கடந்த 6-ம் தேதியுடன் தேர்தல் நடத்தைகள்  82 நாட்களுக்கு  திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து  82 நாட்களுக்கு பின்பாக குறைதீர் முகாம் நடைபெற்றது. பல்வேறு மனுக்களை அளிப்பதற்காக, மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கள்ளிக்குடி, உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி, சிலைமான், மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.

 

தேர்தலுக்கு பின் நடைபெறும் குறைதீர் கூட்டம்

 

குறைதீர் கூட்டத்தை  முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அனைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரின் சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட்டனர்.  நுழைவாயில் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு பைகளிலும், மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில், ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்துச் சென்றனர். போதிய இருப்பிட வசதிகள் இல்லாத நிலையில் ஏராளமான பொதுமக்கள் தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 

குறைதீர் கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஒவ்வொரு பொது மக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்று, மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கினார். அப்போது சில துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தராமல் துறை சார்ந்த அலுவலர்களை மட்டும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் ”உயர் அதிகாரிகள் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.,  இனி மேல் இது போன்று குறைதீர் முகாமில் கலந்து கொள்ளாமல் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.