”நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன்” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

 

மோடி மீண்டும் பிரதமரானது மகிழ்ச்சி


 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பாரத பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி, வாழ்த்துக்கள். தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள், தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து  வாக்களித்திருக்கிறார்கள். ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். மோடி மீண்டும் பிரதமர் ஆனது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது தான். பி.ஜே.பி.,யின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது”. என்றார்.

 

மோடியை நீங்கள் ஆதரிக்க காரணம் ? என்ற கேள்விக்கு :

 

இலங்கை தமிழர்களுக்கு வீடு கொடுத்திருக்கிறார். தமிழீழம் கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துங்கள் என சீமான் தரப்பில் என்னிடம் கூறினார். 

 

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியது தொடர்பான கேள்விக்கு ? 

நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார்.

 

தற்போது பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது என்ற கேள்விக்கு ? 

காமராஜரையே தோற்கடித்தார்கள். அது தான் ஜனநாயகம், ஆட்சியில் இருந்தால் திட்ட தான் செய்வார்கள். திட்ட, திட்ட திண்டுக்கல்லு. வைய வைய வைரக்கல்லு , ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்.

 

அயோத்தில் பா.ஜ.க தோல்வி குறித்த கேள்விக்கு?

அயோத்தியில் பா.ஜ.க வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள்., இது ஜனநாயக நாடு வெற்றி தோல்வி மக்கள் அளிப்பது தான். மக்களிடம் பா.ஜ.க மீது அதிருப்தி இல்லை. காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி பண்ணவில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன் 

 

மோடியை ஏன் பிடிக்கும்- என்ற கேள்விக்கு?

மோடி தியானம் பண்ணுகிறார், ராமகிருஷ்ண மடத்தில் தரையில் படுத்து உறங்கினார்,  விபூதி அணிகிறார், கடவுள் இல்லை என்று சொல்லாதவர், சவுதி அரேபியா போகிறார்.

 

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்த கேள்விக்கு?

அ.தி.மு.க கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கும், நாம் தமிழர் கட்சி சீமான் தனது கட்சியை நன்கு கட்டமைத்து உருவாக்கியிருக்கிறார்.

 

இலங்கைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு?

நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்றார்.