மதுரையில் திமுக பிரமுகர் வீ.கே.குருசாமியின் உறவினர் கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய நபரை வாரண்டில் இருந்தபோதும் கைது செய்யாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 
வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான கிளாமர் காளி கொலை
 
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி முன்னாள் திமுக மண்டலத்தலைவர் வீ.கே.குருசாமியின் சகோதரி, மகனான கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடிவந்தனர். இதனிடையே பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்த, மதுரையை சேர்ந்த சுள்ளான்பாண்டி என்பவர் இந்த கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  சரணடைந்தார்.  இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
 
கைது செய்யாமல் பணியில் அலட்சியம்
 
இந்நிலையில், குற்றவழக்கில் தொடர்புடைய சுள்ளான்பாண்டி. 3 ஆண்டுகளாக குற்றவழக்குகளில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கைது செய்யாமல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக. கூடல்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் சட்ட ஒழங்கு தொடர்பான கூட்டத்தில் குற்றவாளிகள் கைது நடவடிக்கை தொடர்பான அறிக்கையிலும், முறையான தகவல் அளிக்காமல் இருந்ததாக கூறி ஆய்வாளர் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.