மகன் படித்த அரசுப் பள்ளிக்கு இலவசமாக பூச்சுப் பணி செய்து கொடுத்த தந்தை. இணையத்தில் வைரலாகும் வீடியோ, கொத்தனார் அழகு முருகனுக்கு பாராட்டு குவிகிறது.

 

அரசுப் பள்ளியில் படித்த கொத்தனார் மகன்

 

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரம் கிராமத்தில் வசிக்கும் அழகு முருகன் என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பீமன் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்து, தற்போது பீமன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதாரம் (Bachelor of Economics) படித்து வருகிறார்.

 

வறுமையான சூழலில் படித்துவரும் பீமன், தான் படித்த பள்ளியில் அவ்வப்போது சமூக பணிகளையும் செய்து வருகிறார். இதனால் தொடர்ந்து பீமனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளி நெருக்கமாக இருந்து வருகிறது.

 


 

இந்நிலையில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு மராமத்துப் பணிகளை சரி செய்வதற்காக கொத்தனார் அழகு முருகனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் அழைத்திருந்தனர். கடந்த 3 நாட்களாக பள்ளிச் சுவர்களில் பூச்சுப் பணி, வெள்ளை அடித்தல், வளாகத் தூய்மை என பல்வேறு வேலைகளை கொத்தனார் அழகு முருகன் செய்தார். வேலையை முடித்த பிறகு தலைமை ஆசிரியர் தனபால் அவருக்குரிய 3 நாள் கூலியை கொடுத்தபோது பெற மறுத்துவிட்டார். இதுகுறித்து கொத்தனார் அழகுமுருகன் கூறுகையில்...,” என் மகன் பீமன் போன வருசம் தான் இந்த பள்ளிக் கூடத்தில் +2 படித்து முடிச்சுட்டு, திண்டுக்கல்லில் காலேஜ் படிக்கிறான். எனது மகனின் பள்ளி வாத்தியார் முருகேசன் பசங்க நல்லா படிக்கணும்னு ஃபேன், பள்ளிக்கு பெயிண்டிங், பரிசுப் பொருட்கள், சேர் - டேபிள்னு என்று தேவையான உதவிகளை பொது மக்களிடமிருந்து பெற்று பள்ளிக்குத் தந்துள்ளார்.
  

 

அரசுப் பள்ளிக்கு இலவசமாக பராமரிப்பு பணி

 

இந்நிலையில் எங்களின் சார்பாக நாங்களும் பள்ளி வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்ய ஆசைப்பட்டோம் ஆனால் கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. என் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுத்த இப்பள்ளிக்கு எனது உழைப்பிற்கான கூலியை பெறாமல் விரும்பி மகிழ்ச்சியுடன் இந்தப் பள்ளிக்காக அர்ப்பணிக்கிறேன்' என்றார். பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் கூறுகையில், மாணவர் பீமன் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள் மற்றும் மரங்கள் நட்டு வளர்த்து தொடர்ந்து பராமரித்து வந்தார். அவரின் இந்த தன்னார்வமிக்க சேவையை அறிந்த  தனியார் நிறுவனம் மாணவர் பீமனைப் பாராட்டி, அவரது உயர்கல்விக்கு ரூபாய் 25,000 -  வழங்கி உதவி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவன் பீமனின் தந்தையும் அரசுப் பள்ளிக்கு இலவசமாக பராமரிப்பு பணி செய்துள்ளார்' என்றார். கொத்தனார் அழகுமுருகன் மற்றும் மாணவர் பீமனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.