தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமானவர் எடப்பாடி பழனிசாமி. இவர் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வந்தார். எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.


பேருந்தில் பயணித்த பயணி:


எடப்பாடி பழனிசாமி வந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் அவருடன் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் டாக்ஸிங் பேருந்து எனப்படும் விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.




துரோகத்தின் அடையாளம்:


அப்போது, அவருடன் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலமாக ஃபேஸ்புக்கில் லைவ் சென்றார். அப்போது, அவர் தன்னுடைய லைவ்-வில் பேசியதாவது,” இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர்” என்று பேசினார்.


அப்போது, எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் அந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்தார். இதனால், அந்த பேருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட  விசாரனையில் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை விமான நிலையத்திற்கு வந்தவர் என்றும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் என்பதும் தெரியவந்தது.




பின்னர், ராஜேஸ்வரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி வந்த பேருந்திலே அவருக்கு எதிராக சசிகலா ஆதரவாளர் ஒருவர் ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.


ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகிய மூன்று  தரப்பு நெருக்கடிகளையும், தேர்தல் தோல்வி எதிரொலிகளையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த சூழலில், மதுரை சென்ற அவருக்கு விமான நிலைய பேருந்திலே எதிர்ப்புக் குரல் எழும்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Online Rummy Ban: : ’ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன் ?’ ஆர்.என்.ரவி சொன்ன காரணங்கள் இவைதான்


மேலும் படிக்க: எடப்பாடியே அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் - மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்