ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்..," மதுரைக்கும் எடப்பாடிக்கும் ஒரு ராசி உண்டு. மதுரைக்கு வந்தாலே எடப்பாடிக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேர்கிறது. அம்மா என்றால் சும்மா இல்லை. நாங்கள் அம்மா என்று சொன்னால் உணர்வோடு, உணர்ச்சியோடு தான் சொல்வோம். ஜெயலலிதாவுக்காக நாங்கள் செய்த யாகங்கள், யாத்திரைகள், பிராத்தனைகள், இவையெல்லாம் கின்னஸ் ரெக்கார்டு செய்யும் அளவுக்கு உள்ளது என உணர்ச்சிவயப்பட்டார். பிரதமர் மோடிக்கு ஜெயலலிதாவை பற்றி நன்றாகவே தெரியும். மோடியும், ஜெயலலிதாவும் இரண்டு பேரும் கலந்து பேசுவார்கள். பாசம் கொண்டவர்கள். மோடியின் பதவியேற்பிற்காக குஜராத் வரை ஜெயலலிதா சென்றார்.



 

இங்கே இருப்பவர்களுக்கு வரலாறு தெரியாது. ஜெயலலிதாவை பற்றி யாராவது தவறாக பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஜெயலலிதா பக்தர்கள். மாடியில் இருந்து மக்களை பார்ப்பவர்கள் அதிமுக இல்லை. மக்களோடு இருந்து மக்களை பார்ப்பவர்கள் அதிமுக. அனைத்து திறமையும் கொண்ட கலைஞர் முன்பே பட்ஜெட் உரையை கிழித்து எதிர்ப்பு காட்டியவர் ஜெயலலிதா. மடிக்கணினி திட்டத்தை நிறுத்திய திமுக விளங்குவார்களா? அதிமுகவின் எல்லா திட்டங்களுக்கும் திமுக மூடுவிழா நடத்துகிறார்கள். என் துறையில் எதாவது தேவை என்றால் ஜெயலலிதா நேரடியாக கேட்க மாட்டார். செயலாளர் மூலம் எழுதி அனுப்புவார். என்துறையில் நீங்கள் தலையிட கூடாது. உங்கள் துறையில் நான் தலையிட மாட்டேன் என்ற கட்டுக்கோப்போடு இருந்தவர் ஜெயலலிதா. தவறு செய்தால் விசாரிப்பார். நடவடிக்கை  எடுப்பார். ஜீபூம்பா என பெட்டியை வைத்து லட்சக்கணக்கில் மனுக்களை வாங்கிவிட்டு பிரச்னையை தீர்த்துவிட்டோம் என சொல்கிறார் ஸ்டாலின். என்ன பிரச்சனையை தீர்த்தார்.



 

எழுதாத பேனாவுக்கு 82 கோடி செலவழிக்க பார்க்கிறார் ஸ்டாலின். மின் கட்டணம் செலுத்த ஆதாரை இணைக்க நம்பர் வாங்கும் போதே ஆபத்து உள்ளது என எச்சரித்தேன். இப்போது 100யூனிட் மின்சாரத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது. விஞ்ஞான ரீதியில் மக்களை ஏமாற்ற திமுக சிறப்பாக சிந்திக்கிறார்கள்.

இதற்காகவே திமுகவுக்கு நோபல்பரிசு கொடுக்கலாம். இந்தியாவில் மிகப்பெரிய சிறையில் கனிமொழியையும், ராஜாவையும் அடைத்த போது மானமும், ரோசமும் இருந்திருந்தால் திமுக அரசியலை விட்டே அன்றே விலகி இருக்க வேண்டும். அரசியலில் வாரிசு வரலாமா? அரசியலில் வாரிசு இருக்கக்கூடாது. மன்னராட்சியை ஒழித்தோம். ஆனால் திமுகவின் வாரிசு அரசியலை ஒழிக்க முடியவில்லை. நம் கட்சியில் இருந்து சென்ற நிறம் மாறிய பூக்கள், திமுகவின் ஆக்ஸிஜன்கள் ஸ்டாலின் குடும்பத்திடமும், கலைஞர் குடும்பத்திடமும் நடிக்கிறார்கள்,  ஸ்டாலின் காலிலும், உதயநிதி காலிலும் விழுகிறார்கள். இன்பநிதி காலில் விழவும் தயாராகிவிட்டனர். இந்தியாவிற்கே தலைமை தாங்கும் நேரம் வந்துவிட்டது, இந்தியநாடு உங்களை வரவேற்கிறது, இந்திய அரசியலே எதிர்பார்க்கிறது என ஓரே போடு போட்டுவிட்டனர்.



 

இந்திய நாட்டிற்கே தலைமை ஏற்க வேண்டும் ஸ்டாலின்  என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல.அது திமுக கொண்டாடப்பட வேண்டிய வெற்றி அல்ல. 30அமைச்சர்களும், கமலஹாசனும் பிரச்சாரம் செய்து வெற்றியை பெற்றனர். நம்மை ஏமாற்றிய திமுகவுக்கு வரும் தேர்தலில் நாம் ஏமாற்றத்தை தர வேண்டும் என பேசினார்.