மதுரையில் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர், போட்டி முடிந்ததும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதி கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த மாரத்தான் போட்டியானது மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு பயிலக்கூடிய மாணவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கலந்துகொண்டார். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின்பு மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.




 

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

 

இதனையடுத்து மாணவர் தினேஷின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற் கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப‌பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

உயிரிழந்த கல்லூரி மாணவர் தினேஷுடன் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் தினேஷின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் அளித்த விளக்கத்தில் ”மாணவர் தினேஷ் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பின்பு, போட்டி முடிவடைந்து அவரது நண்பர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து சக நண்பர்கள் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் குறைந்தது. அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்தார்” என விளக்கம் அளித்துள்ளார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.