'கீழடியில் தற்போது வரை கிடைத்ததுள்ளது ஒரு வால் அளவு தான். கீழடியை இன்னும் நீண்ட நெடிய ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது' என எழுத்தாளர் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கீழடியை போல் பல்வேறு இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கிடைக்கப் பெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த ஆலங்குடிபட்டி கானாகுளம் கண்மாயில் 20-க்கும்  மேற்பட்ட பண்டைய ஈம சின்னங்களான கல்வட்டங்கள், நெடுங்கற்கள் மற்றும் பலவகை பானை ஓடுகள் இருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.



 

இது குறித்து கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான பா. முருகபிரசாத், நா. நாராயணமூர்த்தி மற்றும் மு. ராகுல்பிரசாத், உள்ளிட்ட தொல்லியல் ஆராய்ச்சி குழுவினர் தெரிவிக்கையில், "ஆலங்குடிபட்டி கானாகுளத்தின் தெற்குப் பகுதியில் சிதலமைந்த நிலையில், செம்புற கற்களை கொண்டு வட்டவடிவில் அடுக்கப்பட்ட பழங்கால ஈம சின்னங்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. மேலும் இறந்தோரின் நினைவாக நடப்படும் நெடுங்கல் பலகைகள் (Menhir) உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த கல்வட்ட தொகுப்பினை சுற்றிலும் பெரிய ஈம தாழிகளின் கனமிக்க அடிப்பாகங்கள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், மெல்லிய கருப்பு நிற பானை ஓடுகள் என பலவகையான பானை ஓடுகள் மேற்பரப்பிலும், மண்ணில் புதைந்த நிலையிலும் காணப்படுகின்றன. 



 

பழங்கால தமிழ்நாட்டில் ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து அதனை சுற்றி இதுபோன்ற கல்வட்டங்களை எழுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. கீரனூர் வட்டாரத்தை சுற்றி அமைந்துள்ள தாயினிபட்டி, துடையூர், செங்களூர் கிராமங்களில் அமைந்துள்ள நீத்தார் நினைவு சின்னங்களை போலவே இந்த கல்வட்டங்களும் அமைந்துள்ளதால் இவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க, இரும்பு கற்காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் கருதப்படுகிறது.




மேலும் சிதறி கிடக்கும் பானை ஓடுகளின் மேற்பரப்பில் மிக நேர்த்தியன வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்புறத்தில் மீன் செதில் போன்று வடிவமைக்கப்பட்ட பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு தெரிவித்த அவர்கள், இவ்விடத்தினை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, கீழடி, சிவகளை போன்று விரிவான அகழ்வாராய்ச்சி நடத்த, தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.



கீழடி 6-ம் கட்ட அகழாய்வு, 7-ஆம் கட்ட அகழாய்வுகளில் கொந்தகை பழமையான ஈமக்காட்டில் அகழாய்வு நடைபெறுகிறது. இங்கு ஏராளமான மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்துவரும் நிலையில் புதுக்கோட்டையில் இது போன்ற தொல்லியல் எச்சங்கள் தென்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் கீழடி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -கீழடி : குறையாத தொன்மம் : ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் தென்பட்ட சுடுமண் உறை கிணறு..!