மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினராக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம், பல்கலை துணை வேந்தர் ஜெ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



பட்டமளிப்பு விழா நெறிமுறைகள் மீறி மத்திய இணை அமைச்சர் முருகனை கௌரவ விருந்தினராக அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலை இணை வேந்தருமான பொன்முடி விழாவை புறக்கணித்திருந்த நிலையில், வரவேற்புரை வாசித்த துணை வேந்தர் அவரின் பெயரை குறிப்பிட்டார். ஆனால், ஆளுநரும், இணை அமைச்சரும் அவரது பெயரை தவிர்த்து விட்டனர்.



அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில்.."தமிழர்கள் உலகம் முழுவதும் ஆட்சி செய்கிறார்கள். தமிழர்கள், இந்தியர்களின் மனித வளம் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பல ஜாம்பவான்கள் உலகையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கும், தமிழருக்கும் தனி அடையாளம் உண்டு. தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பரப்புபவர் பிரதமர் மோடி.

ஐ.நா சபையில் யாதும் ஊரே என்ற வாக்கியத்தை சொல்லி பேசினார் மோடி. வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலையில் மகாகவி பாரதியார் இருக்கையை உருவாக்கி கொடுத்து உள்ளார். பிரதமர் எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமையான திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார். வேலையை தேடும் நபர்களாக அல்லாமல், வேலை கொடுக்கும் நபர்களாக இந்திய இளைஞர்கள் மாற வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்.

 



உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை.

பிரதமரின் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளில் பல துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

தேசிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது, அது தமிழ் மொழி கல்வியை ஊக்குவிக்கிறது" என்றார்.



அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி..,"காமராஜர் பெயரால் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து காமராஜரின் பெருமைகளை பகிர விரும்புகிறேன். காமராஜர் சிறந்த தேசியவாதி. கிராம பகுதியில் இருந்து வந்து பாரத் ரத்னா பெரும் அளவுக்கு உயர்ந்தவர். எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். 17 வயதாக இருக்கும் போது ஜாலியன் வாலபாக் படுகொலை சம்பவத்தை பார்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட துவங்கினார் காமராஜர். வட அமெரிக்காவை சிதைத்து போல இந்தியாவின் ஒற்றுமையை சிதைத்து பொருளாதாரத்தை சிதைக்க ஆங்கிலேய காலனி ஆதிக்கம் திட்டமிட்ட போது அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா சீனாவை விட சமூக, பொருளாதார அளவில் மேம்பட்டு இருந்தது. இந்தியாவில் தான் கப்பல்களின் அடிப்பாகத்தில் நீர் புகாத (Water proof) தொழில்நுட்பம் குறித்து ஆங்கிலேயர்கள் கண்டு கொண்டனர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்தியாவில் கப்பல் கட்டுமானம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சோழர்களின் கப்பல் கட்டுமான அடிப்படையை அறிந்த பின்னரே ஆங்கிலேயர்கள் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்தனர். சோழர்களிடம் இருந்தே கப்பலில் நீர் புகாத தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு பின் அதைக் கொண்டே நமது கடல் வாணிபத்தை கைப்பற்றினர். நமது உள்நாட்டு கல்வி முறையை வீழ்த்தி அவர்களது கல்வி முறையை புகுத்தி அவர்களுக்கு சேவகம் செய்யும் நபர்களாக நம்மை மாற்றினார்கள்.



இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள். இந்தியர்களிடம் உணவு, உடை, பழக்கவழக்கங்களில் இருந்த பன்மைத்துவத்தை அழிக்க முயற்சித்தார்கள். இந்தியாவில் தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும் வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்தனர். பின், அதை பஞ்ச திராவிடர்கள் மற்றும் பஞ்ச ஆரியர்கள் என ஐந்து பகுதிகளாக பிரித்தனர். ஆங்கிலேயர் எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை அனைவரும் மூல நூல்களில் இருந்து தேடி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் காமராஜர். ஆங்கிலேயர் சென்ற பின்னர் தமிழக கல்வி, சுகாதாரம், நீரதாரம் உள்ளிட்ட பல கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். அவரை நினைப்பதில் பெருமை கொள்கிறேன். தற்போது வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எல்லோரும் சென்ற பாதையில் செல்லாமல், புதிதாக தொழில் துவங்க முயற்சியுங்கள். இந்தியாவை பல மாநிலங்களாக, பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது. ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். அப்போது தான் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான கவனத்தை அளித்து முழு இந்தியாவையும் மேம்படுத்த முடியும்.



8 ஆண்டுகளில் பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் இந்தியா முன்னேறி உள்ளது. 20 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே பெரிதாக சிந்தித்து பெரிதாக வளர வேண்டும் என இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

திண்ணியர் ஆகப் பெறின்' என்ற குறள் வழியை பின்பற்றுங்கள்" என்றார்.