புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகே உள்ள  தொட்டியம்பட்டி கிராமத்தில் எரிவாயு தகன மையம் அமைக்க தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம்,  தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எங்கள் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  தொட்டியம்பட்டி கிராம பஞ்சாயத்தில்  ஏற்கனவே  மயானம்  உள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு என தனி தனியாக மயானம் உள்ளது.  இந்த நிலையில் பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்துக்காக , எரிவாயு தகனம் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்துக்குள் போதிய இடம் இருந்தும், எங்கள் கிராம பஞ்சாயத்துக்குள் எரிவாயு தகனம் மையம்  அமைக்க முடிவு செய்து உள்ளனர். இது சரியான முடிவு அல்ல. எனவே, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள, தொட்டியம்பட்டி கிராமத்தில் எரிவாயு தகன மையம் அமைக்க  தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,   ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது போன்ற நவீன தொழில்நுட்பத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும் போது, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு மயானம் என்ற பாகுபாடு காணாமல் போய்விடும். இது போன்ற பாகுபாடுகளை நீக்க நவீன தொழில்நுட்ப பயண்படுகிறது. ஒருவர் இறந்த பிறகாவது ஜாதி பாகுபாடு இல்லாமல் இருந்தால் நல்லது என கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 



மற்றொரு வழக்கு


 

ஊராட்சித் மன்றத் தலைவர்களின் அடிப்படை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட உரிமைகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட  முடியும் என, ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை  இ-டெண்டர் முறையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  மூலம் பணிகள் ஒதுக்கப்படுவதை ரத்து செய்ய கோரிய வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த  ஊராட்சித் மன்றத்தலைவர்கள் தரப்பில்  ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.  அதில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் அந்தந்த ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும். கடந்த மார்ச் 8ல் ஊரக வளர்ச்சித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த பணிகளை இ-டெண்டர் முறையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பணிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இது ஊராட்சிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த அறிவிப்பின் கீழ் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என  மனுவில் கூறியிருந்தனர்.

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பேக்கேஜ் டெண்டரால் ஒப்பந்ததாரர்களுக்கு சிறிய அளவிலான போட்டியே என்றாலும், அரசு மற்றும் பொதுப்பணித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த ஒப்பந்ததாரரும் வரவில்லை. ஊராட்சித் மன்றத் தலைவர்களின் அடிப்படை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட உரிமைகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட வேண்டும். இதுபோல் இல்லாததால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டுள்ளார்.