மதுரை மாவட்டத்திற்கு அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை துவங்கியது. இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் - சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

 



 

ஏற்கனவே பழைமையான ஈமக்காட்டில்  முதுமக்கள் தாழி, எலும்புகள் கிடைத்தன. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து  ஒரு குழந்தையின் எலும்பு ஒன்று 95 செ.மீ அளவில் கிடைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழியில் மனித எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.

 



 

7-ம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள்,  மண் பானை, வட்டில் மூடிகள் , சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை,  அகண்ட வாய் கின்னம், பகடைக்காய், உழவுக்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, சூது பவள மணிகள் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

 



கீழடி தொடர்பான கூடுதல் படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது !

 

இந்நிலையில் தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில்  கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஏற்கெனவே  இரண்டு முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள் மற்றும் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு  முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

 


 

முதுமக்கள் தாழியில் உள்ள எலும்பு கூட்டினை அகற்றி இன மரபியல் சோதனைக்கு உட்படுத்தும் பணிகளில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன மரபியல் சோதனைக்கு பின்னரே தொன்மையான மனிதர்களின்  உணவு முறை, ஆயுட்காலம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்


 

மதுரையின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - TN Corona Update: மதுரையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு!