முன்னாள் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராகவும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார்.  தொடர்ந்து தனது ஆதரவாளர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று தனது ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார்.


 





இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 



 

இந்நிலையில், தனது ஆதரவாளரான இசக்கி முத்துவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு பண உதவி அளித்தார். தொடர்ந்து மு.க.அழகிரியிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா, மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா, உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.அழகிரி எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.


 


பின்னர் இசக்கி முத்து செய்தியாளர்களிடம்..,” திமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அழகிரியின் தேவை முக்கியமானது. மு.க.அழகிரி பதவி ஆசை பிடித்தவர் இல்லை. தி.மு.க., தலைமையுடன் தற்போது வரை பேச்சுவார்த்தை இல்லை, அவர்களே உணர்ந்து எங்களை அழைத்துக் கொள்வார்கள். மதுரையில் அழகிரி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று உணரும் வகையில் நிர்வாகம் உள்ளது. மதுரை நிர்வாகம் மன நிறைவாக இல்லை. அழகிரியை தி.மு.க.,வில் இணைத்து பணியாற்றவில்லை என்றால் 2024 தேர்தல் திமுகவுக்கு சோதனையான தேர்தலாக அமைந்துவிடும்” என்றார்.