மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேலவளவு கருப்பு கோயிலுக்கு முன்பாக உள்ள பறம்பு கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் , மும்மாரி மழை பொழியவும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மேலவளவு சோமகிரி மலை அடிவாரத்தில் உள்ள பறம்பு கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று அதிகாலையில் நடைபெற்றது.


 






இன்று  நடைபெற்ற மீன்பிடி திருவிழா குறித்து  மேலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேலூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர்.  கிராமத்தினர் வெள்ளை வீசியதை  தொடர்ந்து கரையில் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட  மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக இருந்தோர் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க துவங்கினர். 

 


 





 

இதில் கட்லா , ரோகு , விரால் கெளுத்தி , ஜிலேபி உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பிடிபட்ட மீன்களை விற்பனை செய்யாமல் அவரவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து குடும்பத்துடன் உட்கொள்வதை இந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.



இது குறித்து மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சிலம்பரசன்..,” எங்கள் பகுதியின் காவல்தெய்வமான கருப்புக் கோயிலுக்கு முன்பாக உள்ள பறம்புகண்மாயில் தான் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிகாலை 5;10க்கே மீன்பிடிக்க பல்வேறு கிராமத்தினர் வண்டிகட்டி வந்தனர். இந்த முறை பெரிய சைஸ் மீன்கள் அதிகளவு கிடைத்தது. சாதி, மதத்தை விலக்கி அனைவரும் மீன்பிடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்றார்