பெட்ரோல் விலை, இறைச்சி விலை எவ்வளவு உயர்ந்தாலும் எப்போதும் டிமாண்ட் இருக்கதான் செய்யும். பெட்ரோல் விலை ஏறினாலும், இறங்கினாலும் நாம் பெட்ரோல் போடுவதை நிறுத்துவதில்லை. அதே போல் இறைச்சிகளின் விலை உயர்ந்தாலும் அசைவ விரும்பிகள் அதனை விடுவதில்லை. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கி சமைத்துவிடுவார்கள். இந்நிலையில் இறைச்சி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என மதுரை கசாப்க் கடைக்காரர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை  திருமங்கலத்தில் உள்ள கறிக்கடை ஒன்றில் ஒரு கிலோ சிக்கன் வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆடி என்றாலே ஆஃபர் தான் இருக்கும். அதனால் தள்ளுபடிக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்திலும் இந்த  மாதம் முழுவதும் இதே சலுகை வழங்கப்படுவதாக கறிக்கடை உரிமையாளர் அறிவித்துள்ளார். கறிக்கடைக்காரர் தன்னுடைய ஆஃபர் அனைவருக்கும் தெரியவேண்டும் என ஆடி மாதம் முழுவதும் அதிரடி ஆஃபர் வழங்கப்படும் என நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.



 திருமங்கலம் பாம்பாட்டி தெருவில் 'மகிழ்' என்ற பெயரில் சந்திரன் என்பவர் இந்த கறிக்கடையை  நடத்தி வருகிறார். இங்கு வெள்ளாடு, நாட்டுக்கோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி என பல ரகங்களில் இறைச்சிகள் கிடைக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கறிக்கடை கடை துவங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம்., 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வந்தார். இந்நிலையில் அதற்கு ஒரு படி மேலாக., தற்போது ஆடி மாதம் என்பதால் ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில் மிஞ்சும் வகையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து., போஸ்டர் ஒட்டி  திருமங்கலம் மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 



தற்போது உள்ள ஒரு லிட்டர் பெட்ரோல் 103-ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது., இதில் சந்திரன் இறைச்சிக் கடையில் ஏற்கனவே ஒரு கிலோ இறைச்சி அறிவிக்கப்பட்ட அதே விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூடுதலாக கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெகுதூரங்களிலிருந்து இறைச்சி வாங்க இந்த கடைக்கு வரக்கூடிய நபர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி வருவது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 



இது குறித்து திருமங்கலம் பகுதி மக்கள்....” பெட்ரோல், இறைச்சி இரண்டுமே எட்டா கனியாக மாறிவரும் சூழலில் கறிக்கடைகாரர் குறைந்த விலையில் கறியையும். இலவசமாக பெட்ரோலும் வழங்குவது மகிழ்ச்சியை ஏற்படித்தியுள்ளது” என்றனர்