இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் அனைத்து கோயில்களிலும் விழா வழிபாடுகள் நடைபெறும். இதுதவிர  விழாவையொட்டி வீடுகளில் மக்கள் பூஜைகள் செய்து விநாயகருக்கு கொளுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடத்தப்படுவர். மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும்.


Vinayagar Chaturthi 2024 Wishes: வெற்றி விநாயகனை கொண்டாடுவோம்: சொந்தங்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ் இதோ!


பொதுவாக விழாக்களில் அதிக இடம் பிடிப்பது பூக்கள்தான். இதனால் சதுர்த்தி விழா விற்பனைக்காக திண்டுக்கல் மற்றும் தேனியில் விற்பனையாகும் பூக்கள் விலை அதிகரித்து விற்கப்பட்டது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூக்களை வாங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்குவதற்கு மார்க்கெட்டில் குவிந்தனர். வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கினர்.


இதனால் பூக்களின் விலை இன்று அதிகாலை முதலே  உயர்ந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்றது. இதேபோல் முல்லைப்பூ ரூ.520-க்கும், சாதிப்பூ ரூ.400-க்கும், காக்கரட்டான் ரூ.800-க்கும், அரளி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.450-க்கும், ரோஜா ரூ.400-க்கும், வாடாமல்லி ரூ.70-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-க்கும் விற்பனை ஆனது. ஒரேநாளில் 20 டன் பூக்கள் விற்பனையானது. விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.




அதே போல் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கம்பம் , போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை இன்று அதிகரித்தே விற்பனையானது. ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் செவ்வந்தி, காக்கரட்டான், கனகாம்பரம், முல்லை உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் இன்று மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்ததால் மார்க்கெட்டில் வியாபாரிகள் போட்டிப்போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.




மேலும் குறிப்பாக தேனி மாவட்ட தமிழக, கேரள எல்லையான கம்பம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சற்று குறைந்தே உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான விற்பனை மட்டுமே நடந்த நிலையில், கேரள மாநிலத்தவர்களி வருகை சற்று குறைந்திருந்ததாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓண்ம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு கொண்டு செல்லப்படும் பூக்களின் விற்பனை குறைந்து பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இதுதவிர அவல், பொரி, பேரிக்காய் மற்றும் கொய்யா, மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், தேங்காய், வெற்றிலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதேபோல் விநாயக பெருமானுக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. இதனால் பச்சரிசி மாவு, வெல்லம், எள், கொண்டைக்கடலை ஆகியவற்றையும் மக்கள் வாங்கினர். இதனால் பூ மார்க்கெட் மட்டுமின்றி மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது.