திருமங்கலம் விமான நிலைய சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் நகராட்சி ஒப்பந்த பெண் ஊழியர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

துப்புரவு பணிக்கு பைக்கில் லிப்ட்

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த திருமங்கலம் அருந்ததியர் தெருவில் வசித்து வரும் நாகரத்தினம் 38 மற்றும் கள்ளிக்குடி தாலுகா அகத்தாம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வரி 35  இருவரும் மதிய உணவு இடைவேளைக்கு சென்றுள்ளனர். பின்பு திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள காமராஜபுரம் பகுதியில் துப்புரவு பணியை மேற்கொள்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, தங்கள் இருவரையும் காமராஜபுரம் பகுதியில் இறக்கிவிட கேட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த நபரும் இரண்டு பெண்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, விமான நிலையசாலையில் சென்றனர். ஏற்கனவே இந்த சாலையில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

 

பெண்கள் உயிரிழந்ததால் தப்பியோட்டம்

 

இந்த சூழலில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டிச் சென்றவர் சாலையில் உள்ள பள்ளத்தில் இறக்கிய போது நிலை தடுமாறி கீழே விழ அதே சாலையில் பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த நபர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் அச்சத்தில் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடிவிட்டார். விபத்து நடந்ததை அறிந்த லாரி ஓட்டுநரும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவம் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் இறந்த இரண்டு பெண்களின் உடலையும் கைப்பற்றி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் யார்? லாரி ஓட்டுநர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பெண்  ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

மேலும் இறந்த பெண்களின் உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம்தொடர்பாக தகவல் கேட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்களும், நகராட்சி அலுவலர்களும் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், திருமங்கலம் விமான நிலைய சாலையில் ஏற்கனவே சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக இருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் சம்பந்தப்பட்ட மேம்பால ஒப்பந்ததாரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோசமான சாலையால் இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு ஏறிச் சென்ற நகராட்சி ஒப்பந்த பெண்  ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.