திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி,  திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் , பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி செந்தில்குமார்  உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நிறைய தொடர்பு உண்டு. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இங்கு வந்துள்ளேன். இளைஞர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்று முதலாக வந்தது திண்டுக்கல் மாவட்டம். 




நான் துணை முதல்வராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம் இது. திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை. கொட்டும் மழையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு என்னை வரவேற்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது உங்களை சந்தித்தேன் மிகப்பெரிய வெற்றியை திண்டுக்கல் தொகுதியில் கொடுத்துள்ளீர்கள். 40க்கு 40 என நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தந்தனர். வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




பெண்கள் வீட்டை விட்டு வெளியே  வரக்கூடாது என்ற நிலை இருந்தது. அண்ணா, பெரியார்,  கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்தனர். நானும் சொன்னேன். நான் சொல்லாததை பொய்யாக திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னா சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன். அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில்  சந்தித்து கொண்டு இருக்கின்றேன். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது. 1 கோடியே  16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. விடுபட்டவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும்” என்றார்.


மேலும் அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பல பேர் இந்தியை திணிக்க பல்வேறு வகையில் முயற்சி  செய்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை அதனால் தமிழ் தாய் வாழ்த்தில் சில வார்த்தைகளை நீக்குகின்றனர். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் பல பேர் துணை போக முயன்றனர். முதல்வர் செய்த செயலால் அனைவரும் மண்ணை கவ்வி கொண்டு உள்ளனர். அண்ணா சூட்டிய தமிழ்நாடு பெயரை மாற்ற நினைத்தார் ஒருவர். தமிழக மக்கள்  எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடைசியில்  மன்னிப்பு கேட்டார்.




தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். திமுக கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும் தமிழனையும் திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது. மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ் பெயரை   சூட்ட வேண்டும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.