மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். 

திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது, இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.



 

அறநிலைத்துறைக்கு சொந்தமான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக முழுமையாக தண்ணீர் நிரம்பி அழகுற காட்சியளித்து வருகிறது. தெப்பக்குளத்தில்  ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக  படகு சவாரியும் துவங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படகு இயக்கப்படும்.



 

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள் (லைஃப் ஜாக்கெட்) எதுவும் வழங்காமல் படகில் ஏற்றி தெப்பக்குளத்தை சுற்றி காட்டுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் முறையாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உடைகள் தற்போது வழங்கப்படுவதில்லை, முக்கிய பிரமுகர்கள் வரும்போது மட்டும் புதிய பாதுகாப்பு உடைகள் ( லைப் ஜாக்கெட்கள்) வழங்கப்படுவதாகவும் புகார் எழும்பி வருகிறது. தெப்பக்குளம் படகு சவாரியில் பெரியவர்கள், பெண்கள் முக்கியமாக குழந்தைகள் என அனைவரும் விரும்பி பயணம் செய்வார்கள், ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பான லைப் ஜாக்கெட்கள் வழங்காமல் படகில் ஏற்றி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் படகு சவாரியில் அசம்பாவிதம் ஏற்பட்டு 23 நபர்கள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அது போல எந்த ஒரு அசம்பாவிதமும் இங்கு நடப்பதற்கு முன்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.