தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். இரு மாநிலங்களின் எல்லையான தேனி மாவட்டத்தில் கேரள மாநிலத்தவர்கள் வர்த்தக மற்றும் வணிக ரீதியான போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.




கேரளாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விசேஷ நாட்கள் மற்றும் விழா காலங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தேனி மாவட்டத்தில் உள்ள எல்லையோர பகுதிகளான கம்பம், போடி, தேவாரம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.


"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!


இந்த நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளான கம்பம் மார்க்கெட், போடி மார்க்கெட், தேனி முக்கிய கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விசேஷ நாட்களின் எதிரொலியாலும் இன்று அதிக அளவில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதை காண முடிந்தது . சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம், பூக்கள், வாழை மரக்கன்று போன்றவை விற்பனை மும்முரமாக இருந்தது.




மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் போடப்பட்டு இருந்தன. ஆயுதபூஜையையொட்டி லாரி பட்டறைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அலங்காரம் செய்ய தேவையான அலங்கார பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் ஆயுதபூஜை நாளில் பூஜைகளை முடித்துவிட்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். இதனால், பூசணிக்காய் விற்பனையும் களை கட்டியது.கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜைக்காக கட்டப்படும் வாழை கன்று விலை கடந்த ஆண்டு இரண்டு வாழைக்கன்று இருபது ரூபாய்க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 


Vijayadashami 2024: விஜயதசமி பண்டிகை! தமிழ்நாடு முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் இயங்கும் - எதற்காக?


பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில்  கட்டிய பூ மாலையின் விலை 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, சீத்தா, வாழை, பேரிக்காய், எலுமிச்சை உள்ளிட்ட பூஜைக்கு பயன்படுத்தப்படும் பழங்களின் விளையும் சாதாரண நாட்களில் விற்கப்படும் விலையை காட்டிலும் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.




பூஜை பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்த போதும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள  வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் ஆயுத பூஜை விழாவை கொண்டாடுவதற்காக  பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதிக அளவில் வந்ததால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.