தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் 19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "தென் சீனக் கடலில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை ஒட்டுமொத்த இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தின் நலனுக்கானது. கடல்சார் செயல்பாடுகள் கடல் சட்டம் குறித்த ஐநா விதிமுறைகளுக்கு  இணங்க இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


"பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு காண முடியாது"


சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தையும்  வான்வெளியையும்  உறுதி செய்வது அவசியம். இதற்கு வலுவான, பயனுள்ள நடத்தை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பிராந்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.


உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மோதல்களால், மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவை. யூரேசியா, மத்திய கிழக்கு போன்ற பிராந்தியங்களில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும்  எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உள்ளது.


நான் புத்தரின் பூமியிலிருந்து வருகிறேன். இது போருக்கான நூற்றாண்டு அல்ல என்று நான் திரும்பத் திரும்பக் கூறியுள்ளேன். பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு காண முடியாது.


பிரதமர் மோடி பேசியது என்ன?


இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை  மதிப்பது அவசியம். மனிதாபிமான கண்ணோட்டத்துடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜ தந்திர நடைமுறைக்கு நாம் வலுவான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


விஸ்வபந்து என்ற முறையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில், இந்தத் திசையில் பங்களிக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும். உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை எதிர்த்துப் போராட, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


சைபர், கடல்வழி, விண்வெளி ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய தூணாகும். இன்றைய உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் சோனெக்சே சிபந்தோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


அடுத்து தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியாவுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.