சக்கரம்  சுழலாமல் தீப்பொறி பறந்து சென்ற  சரக்கு ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த துலுக்கப்பட்டி ரயில் நிலைய அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட துலுக்கப்பட்டி ரயில் நிலையத்தில் ஆர். ஜெயபிரகாஷ் டிசம்பர் 26 அன்று நிலைய அதிகாரியாக பணியில் இருந்தார். அன்று துலுக்கப்பட்டி ரயில் நிலையத்தை கடந்த சரக்கு ரயிலின் ஒரு சரக்கு பெட்டியின் சக்கரம் சுழலாமல் தண்டவாளத்தில் தேய்த்து தீப்பொறி பறந்து கொண்டே சென்றது.


 






இதை கவனித்த ஜெயபிரகாஷ் உடனடியாக மதுரை கட்டுப்பாட்டு அறைக்கும் சாத்தூர் ரயில் நிலைய அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்த சொன்னார். அதன்படி ரயில் நிறுத்தப்பட்டு சக்கரம் சரி செய்யப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  அதே நாளில் புகலூர் காகித ஆலைக்குச் சென்ற சரக்கு ரயில் பெட்டியின் கதவு ஒன்று திறந்த நிலையில் சென்றது. இதே நிலையில் தொடர்ந்து சென்றால் அருகில் உள்ள சிக்னல் கம்பங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதையும் விருதுநகர் ரயில் நிலைய அதிகாரிக்கு தெரிவித்து, ரயிலை நிறுத்தி கதவை மூடச் செய்தார்.




இதன் மூலமும் விபத்து தவிர்க்கப்பட்டது.  ஒரே நாளில் இரு விபத்துகளை தவிர்க்க உறுதுணையாக இருந்த ஜெயபிரகாசுக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. செவ்வாயன்று (டிசம்பர் 26) நடைபெற்ற கோட்ட ரயில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சி. செல்வம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை, முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் வி.பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.