Just In





கொடைக்கானல் போறீங்களா..? இன்று முதல் இது கட்டாயம் மறக்காதீங்க..!
Kodaikanal e-Pass: நீதிமன்ற உத்தரவின் படி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை பெரும்பாலனோரை ரசிக்க வைக்கிறது, வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.
இந்த நிலையில் மலை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றம் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் அனுமதிக்க வேண்டும் என ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளாக உள்ள பழனி வழியாக வர உள்ள அய்யும்புள்ளி சோதனை சாவடி வத்தலக்குண்டு வழியாக வர உள்ள காமக்காப்பட்டி காவல் துறை சோதனை சாவடி, உள்ளிட்ட சோதனை சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனையானது தீவிரப்படுத்தப்பட உள்ளது,
குறிப்பாக வார நாட்களில் 4000 வெளியூர் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும் அனுமதிக்கப்பட உள்ளது. இதில் இ-பாஸ் பதிவு செய்வதில் 4,000 மற்றும் 6,000 இ-பாஸ் பதிவு செய்தவுடன், இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்யாத வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் பதிவு செய்த நாளில் சுற்றுலா வாகனங்கள் வராமல் உள்ள சூழ்நிலையில் மற்ற சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் கொடைக்கானல் நகர்ப்பகுதிக்குள் வருவதற்கு வழி வகை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று பழனி ஐயம்புள்ளி சோதனை சாவடியில் இ-பாஸ் பெறாமல் இருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தது.
மேலும் இ-பாஸ் பெறாமல் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அனுமதிக்காமல் இ-பாஸ் எடுத்த பின்பு அனுமதித்து வருகின்றனர். கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து சோதனை சாலையிலேயே பதிவு செய்து இ.பாஸ் உடனடியாக எடுத்துக்கொண்டு சென்று வருகின்றனர். உள்ளூர் வாகனங்களுக்கும், பேருந்துகள் மற்றும் ரயில்களில் வருவோருக்கும் விவசாய பணிகளுக்கு செல்வோருக்கும் எந்த வித கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே போல வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்க்க, காவல் துறை சோதனை சாவடி அருகே பிளாஸ்டிக் சோதனைகளும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளதும் குறிப்படத்தக்கது.