வழி தவறி வரும் மற்றும் வீட்டை விட்டு ஓடி வரும் குழந்தைகள் அதிகளவு வந்து சேர்வது ரயில் நிலையத்திற்கு தான். இதுபோன்ற குழந்தைகளை மீட்டு நல்வழிப்படுத்த மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் எக்தா என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் குழந்தைகள் உதவி மையத்தை நடத்தி வருகிறது.








 

இந்த மையத்தின் ஐந்தாவது ஆண்டு விழா மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கோட்ட பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு, ரயில்வே காவல்துறை ஆய்வாளர் எம். குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த குழந்தைகள் உதவி மையம் கடந்த நான்கு ஆண்டுகளில் 441 சிறுவர்கள் 77 சிறுமிகளை மீட்டு காப்பாற்றி உள்ளது. இதில் 177 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 341 குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க பட்டுள்ளன.



 


 

மேலும் மீட்கப்பட்ட குழந்தைகளின் நிலையை, அவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த மையம்  ஒரு வருடத்திற்கு கண்காணிக்கிறது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு, பாலின சமநிலை, குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை கடத்தல் தடுப்பு, குழந்தை கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் கண்காட்சியும் நடைபெற்றது.  விழாவில் தொண்டு நிறுவன இயக்குநர் ஒடிசாவை சேர்ந்த பிம்லா சந்திரசேகர், மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ் சுஜாதா, நிலைய மேலாளர் ஏ. பிரபாகரன், வர்த்தக ஆய்வாளர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.