சிவகாசியில் பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்கும் பணி 2 வது நாளாக நேற்று தொடர்ந்து. 25 மணி நேரத்திற்கு பின் நேற்று மாலை 4:35 மணிக்கு உருக்குலைந்த நிலையில் தொழிலாளர்களான  ஹமீதா 55, கார்த்தீஸ்வரி 33, உடல்கள் மீட்கப்பட்டன.

 






விருதுநகர் மாவட்டம் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது நேருஜி நகர் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதி அதிகமாக மக்கள்  நடமாட்டம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் ராமநாதன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவர் சிறிய ரக பட்டாசு குழாய் கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.



 இந்நிலையில் இவர் குழாய் தயாரிக்கும் உரிமம் பெற்று  இவரது வீட்டில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில்  சட்டவிரோதமாக தயாரித்து  பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.  இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டுருந்த  வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  கார்த்தீஸ்வரி , ஹமீதா ஆகிய 2 பேரை காணவில்லை என்பதால் வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டு இருந்த போதிலும் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். உரிமையாளர் ராமநாதன் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் தலைமறைவாகி விட்டதாகவும் இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



 சுமார் 25 மணி நேரம் தீயணைப்புத் துறையினர் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசு வெடிப்பதால் தொடர் மீட்புப் பணிக்கு  ஆட்சியர் உத்தரவிட்டார்.  இந்த மீட்புப் பணியில் விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் வெம்பக்கோட்டை சாத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டு வந்தன.  இதன் அருகில் குடியிருப்பவர்கள் மாற்று இடத்திற்கு சென்று தங்க அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்தப் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.  இந்நிலையில் மீட்கும் பணி 2 வது நாளாக நேற்று தொடர்ந்து. 25 மணி நேரத்திற்கு பின் நேற்று மாலை 4:35 மணிக்கு உருக்குலைந்த நிலையில் தொழிலாளர்களான  ஹமீதா 55, கார்த்தீஸ்வரி 33, உடல்கள் மீட்கப்பட்டன.