மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வரலாற்று  ஆர்வலர் அருண் சந்திரன் கள ஆய்வில் ஈடுபட்டபோது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் பாறை  இடுக்குகளில் இருப்பதை கண்டறிந்தார். அதனைத்தொடர்ந்து  வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் செல்லபாண்டியன், முனைவர் முனீஸ்வரன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு  மேற்கொண்டு கற்படுக்கைகளை ஆய்வு செய்தனர். 



இதுதொடர்பாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கூறியதாவது, மதுரையில் கி.மு. 3 லிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்குப் பெற்று இருந்துள்ளது. மதுரையை சுற்றிலும் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலை, கீழக்குயில்குடி, மாங்குளம் உள்ளிட்ட எண்பெருங்குன்றங்களில் சமணம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் ஏற்கனவே  கிடைத்துள்ளன. மேலும் திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் புதிய கற்படுக்கைகள் கிடைத்துள்ளன. மற்ற படுக்கைகளைப்போல இவையும் கி.மு. 2 மற்றும் 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஏற்கனவே உள்ள  கற்படுக்கைகளில் கி.மு. 2 மற்றும் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.



ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்ப்படுக்கைகளில் கல்வெட்டுகள் எதும் கண்டறியப்படவில்லை.  சைவம் போன்று சமணமும் உருவ வழிபாட்டுக்கு திரும்பிய காலத்தினை உறுதிப்படுத்தும் விதமாக  திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு சமணம் சார்ந்த அடையாளங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த மலையில் புதிய கற்படுக்கைகள்  கிடைத்து வருவது வரலாற்று ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிதான் என்ற போதிலும் .  இந்த பகுதியை தொடர்ந்து  தொல்லியல் ஆய்வுக்குட்படுத்தி  மேலும் ஆய்வு  செய்தால் தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய தொல்லியல் சான்றுகள் கிடைப்பதுடன்  சிறப்புபிக்க திருப்பரங்குன்றம் மலை தாங்கி நிற்கும் முழுமையான வரலாற்றுச் சான்றுகளை நாம் அறிய முடியும்” என்றார்


 




 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண