தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கடமலை, மயிலை ஒன்றியப் பகுதிகளில் முருங்கை சாகுபடி சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் செய்யப்படும் முருங்கை சாகுபடி தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. முருங்கை இலைகளை பொடியாக்கி ஆஸ்திரேலியா சீனா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் விளைச்சல் அதிகரிக்கும் நேரங்களில் முருங்கை விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. முருங்கை விவசாயிகளை பாதுகாக்க தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.




இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி எனும் ஊரில் முருங்கை சிறப்பு மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தேக்கம்பட்டியில் சமத்துவபுரம் மற்றும் மாவட்ட சிறைச்சாலை அருகே சுமார் 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு முருங்கை சிறப்பு மையம் அமைக்க ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றது. இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கூறுகையில், முருங்கை சாகுபடியை மேம்படுத்தும் வகையில் முருங்கை சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.




தமிழகத்தில் கடந்த 1950ஆம் ஆண்டு கால கட்டத்தில் முதல் முறையாக தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. அப்போது பெரியகுளம், கன்னியாகுமரி, தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் தற்போது தேனி மாவட்டத்தில் முருங்கை  சிறப்பு மையம் மற்றும் பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முருங்கை ஆராய்ச்சி முருங்கை நாற்றுகள் உற்பத்தி முருங்கை இலை, விதைகள், முருங்கைக்காய் போன்றவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். 




மேலும் இந்த மையம் ஒரு ஆண்டில் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும். விவசாயிகள் முருங்கை இலை முருங்கை காய்களை இந்த மையத்தின் வழிகாட்டுதலின் பேரில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். இந்த மையத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். எனவும் இங்கு முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்தும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறினார்.


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!


தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..