தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என பெயர் பெற்றது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். இங்கு மூலவர் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. இங்குள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று தான் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கோவிலில் சித்திரைத்திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருக்கார்த்திகைவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்,  பங்குனி பிரமோற்சவம் விழாவில் தேரோட்டம், பிரதோஷ வழிபாடு, போன்ற  நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.




பல நூற்றாண்டுகளுக்கு  முன்பு பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக்  கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான் என்று வரலாறு  கூறுகிறது.




பாலசுப்பிரமணியர் கோவில் என்றவுடன் இது முருகன் கோவில் என்று அர்த்தமில்லை. இது ஒரு சிவன் கோவில் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் என்பதால் ராஜேந்திர சோழீஸ்வரர் என இங்குள்ள சிவபெருமான் புகழ்பெறுகிறார் தாயார் அறம் வளர்த்த நாயகி என்று புகழ்பெறுகிறார்.  ஒரே கோயிலில் தனித்தனியாக ஒவ்வொரு கொடிமரங்களுடன்  சிவன், அம்பாள், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தனி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர் தம்பதி சமேதராக சூரியன், சந்திரன், அதிகார நந்தி, கன்னிமூல கணபதி, லட்சுமி சரஸ்வதி, பாலதண்டாயுபாணி, ஏகாம்பரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், ஜுரதேவர், பைரவர், 63 நாயன்மார்கள், ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.




சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில். அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர், துர்கை, மன்மதன் நவகிரகணங்கள் ஆகியோரும் அமைந்துள்ளனர். இங்குள்ள மயில் மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளது இந்த மயில் மண்டபத்தில் உள்ள மயில் அபூர்வ ஒற்றை கல் மயில். இதன் மற்றொரு சிறப்பு இங்குள்ள மிருத்யுஞ்சர் சன்னதி இவர் மரணத்தை வென்றவர் என்பதால் அதிக அளவில் அறுபது, எண்பது திருமணங்கள் இங்கு நடைபெறுகிறது. ராஜேந்திர சோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது. இங்குள்ள முருகப்பெருமானான பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதிகம்.




இக்கோவில் இங்கு புகழ் பெற்ற வராக நதிக்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. அதுவும் மருத மரங்களின் வேர்களுக்கிடையில் வராக நதி ஓடுகிறது. இந்த வராக நதிக்கரையில் நீராடினால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை,  இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர். இந்நதியில் நீராடினால் தீராத வியாதிகள் தீரவும் திருமண தோஷம் பிள்ளை இல்லா குறை போன்ற பிரச்னை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக இத்திருத்தலம் விளங்குவதால், தங்களின் நேர்த்திக்கடன், வழிபாடுகளை இந்த கோவிலில் செய்கின்றனர்  பக்தர்கள். மேலும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் போன்ற வழிபாடுகள் செய்யப்படுகின்றன.



இந்து கோவில்களின்  முக்கிய ஒன்றாக கருதப்படும் கோசாலைகள் (பசுமாடுகள் வளர்க்கப்படும் இடம்) இங்கு அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்திய பின் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு  கீரை, பழங்கள் கொடுத்து வணங்கி செல்வது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. இக் கோவிலில் திருவிழாக்கள், பிரதோஷங்கள், திருமணங்கள் என்று அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரியகுளம் என்ற ஊரின் சிறப்பு பெரியகோவில் என்பதாகும்.


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!