Kanchipuram Metro Project: "காஞ்சிபுரம் வரை மெட்ரோ இயக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது"
சென்னையில் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்கள் தற்போது 2 வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116 கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது.
அடுத்த கட்ட மெட்ரோ பணிகள்
இதில் 3-வது வழித்தடம் 45 கிலோமீட்டர். தொலைவுக்கு மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலும், 4-வது வழித்தடம் 26 கிலோமீட்டர் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-வது வழித்தடம் 44 கிலோமீட்டர் தொலைவுக்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளை வரும் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, அந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று 4-வது வழித்தடமாக, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 44 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வழித்தடத்தை பரந்தூர் வரை நீடிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மெட்ரோ திட்டம்? Kanchipuram Metro Project
காஞ்சிபுரம் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். தற்போது காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம், பொன்னேரி கரை பகுதியில் அமைய உள்ளது. இங்கிருந்து பரந்தூர் விமான நிலையம் அருகில் இருப்பதால், பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைக்காக தினமும் சென்னை சென்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பேருந்துகள் மற்றும் சென்னை புறநகர் ரயில் சேவையை நம்பியுள்ளனர். புதியதாக அமைய உள்ள பரந்துர் விமான நிலையம் வரை, மெட்ரோ வரவுள்ளதால் அதை பொன்னேரிகரை வரை, கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: Tambaram New Bus Stand: GST சாலையில் இனி NO டிராபிக்.. தாம்பரத்தில் வருகிறது புதிய பேருந்து நிலையம்!!
பூந்தமல்லி- பரந்தூர் திட்டம் என்ன ?
பூந்தமல்லியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஓரமாகவே, தற்போது அமைய உள்ள மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. ஏனாத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையிலையே நேராக வரும் மெட்ரோ ரயில் பாதை, அங்கிருந்து வலது புறம் திரும்பி பரந்தூர் அடைய உள்ளது. இந்தநிலையில் அங்கிருந்து குறுகிய தூரம் உள்ள பொன்னேரிகரையில் தற்போது பேருந்து நிலையம் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஏனாத்தூரிலிருந்து பொன்னேரி கரை வரை நேராக வந்து அங்கிருந்து வலது புறமாக சென்று பரிந்துரை அடைந்தால் நன்றாக இருக்கும் என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இரு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாய்மொழியாக வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், காவல்துறை சார்பில் வலியுறுத்தி இருப்பது காஞ்சிபுரத்திற்கு மெட்ரோ வருவதற்கான சாத்திய கூறுகளை அதிகப்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள் என்னென்ன ? Advantages Of Kanchipuram Metro
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் வரை மெட்ரோ இயக்கப்பட்டால், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அதேபோன்று பரந்தூர் விமான நிலையத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை மெட்ரோ செல்வது பேருந்தை பயன்படுத்த விரும்பும், விமான நிலைய பயணிகளுக்கும் வரப் பிரசாதனமாக இருக்கும்.
காஞ்சிபுரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருப்பதால், காஞ்சிபுரத்து வரை மெட்ரோ இயக்குவது என்பது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. தினமும் சென்னை சென்று வருபவர்களுக்கு மெட்ரோ பெரிய அளவில் உதவி செய்யும். இதனால் மெட்ரோவுக்கு வருமானம் மற்றும் பயணிகளுக்கு பயண நேரம் குறையும் என்பதால் காஞ்சிபுரம் வரை மெட்ரோ நீட்டிப்பது, என்பது சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.