கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண், அவரது மகளுடன் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டிற்குச் சென்றபோது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில் இன்று மரணமடைந்தார்.  


நடந்தது என்ன? 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது, ஒரு பெண் பாலியல் புகார் அளித்த நிலையில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தெரிவித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி எடியூரப்பா வீட்டிற்கு சென்றபோது, ​​தனது மகளை எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார்.


இந்நிலையில் எடியூரப்பா புகாரளித்த பெண் பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட புகார்தாரர், கடுமையான சுவாச சிக்கல்கள் காரணமாக மே 26 ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


சிறுநீரக கோளாறு:


பெண் இறப்பு குறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் எம்ஆர் கூறுகையில், அந்த பெண்ணை அவரது மகள் அழைத்து வந்தார். தாயின் சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்ததாவது, கடந்த எட்டு ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளித்த போதிலும், கடுமையான சுவாசக் கோளாறால் அந்தப் பெண் உயிரிழந்தார் என்று மருத்துவர் தெரிவித்தார்.


மருத்துவர்கள், குடும்பத்தாரிடம் பிரச்னைகளை விளக்கியதாகவும், சிகிச்சை நடவடிக்கைகளில் அதிருப்தி இருந்தால் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாகவும் தெரிவித்தார். ஆனால், சிகிச்சையில் குடும்பத்தினர் திருப்தி தெரிவித்ததாகவும், புகார் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.


எட்யூரப்பா தரப்பு சொன்னது என்ன?


மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.


இவர், தனது மகளுடன் எடியூரப்பாவின் வீட்டிற்குச் சென்றபோது, ​​முன்னாள் முதல்வர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். இருப்பினும், குற்றச்சாட்டுகளை மறுத்த எடியூரப்பா, நியாயம் கேட்டு தாயும் மகளும் தன்னை அணுகியதாகவும், அவர்களை உதவிக்காக பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் அனுப்பியதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து சதாசிவநகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், அந்த பெண் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.