இந்தியாவின் தலைநகரம் டெல்லி ஆகும். நாட்டின் போக்குவரத்து மிகுந்த நகரங்களில் டெல்லியும் ஒன்றாகும். டெல்லியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் டெல்லி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுக்குள் வருவது கடினமாகவே உள்ளது.


நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ:


இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சமயத்தில் பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. டெல்லியின் பரபரப்பான பகுதிகளில் ஹம்தார்த் நகர். இங்குள்ள சங்கர் விகார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.


பாதசாரிகளின் சிரமத்தை போக்கும் வகையில் பாதசாரிகள் மட்டும் பயன்படுத்தும் நடைபாதையுடன் கூடிய மேம்பாலம் அங்கு உள்ளது. இந்த சூழலில், போக்குவரத்து நெருக்கடி இருப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்டோவை அந்த நடைபாதையின் மேலே ஏற்றி ஓட்டத் தொடங்கினார்.


இணையத்தில் வைரல்:






அவர் ஓட்டத் தொடங்கியதும் அந்த ஆட்டோவின் உள்ளே பயணி ஒருவரும் ஏறி அமர்ந்து கொண்டார். சினிமாவில் வருவது போல அந்த ஆட்டோவை ஆட்டோ ஓட்டுநர் படிக்கட்டுகளின் மேலே ஏற்றிக்கொண்டு ஓட்டிச் சென்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்காக கட்டப்பட்டுள்ள நடைபாதையிலும், நடை மேம்பாலத்திலும் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் சாகசத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போக்குவரத்து காவல்துறை அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் கால்நடை அமைச்சர் தாரம்பால் தன்னுடைய வி.வி.ஐ.பி. காரை ரயிலை பிடிக்க தாமதம் ஆகிவிட்டது என்பதற்காக லக்னோ ரயில் நிலையத்தின் ப்ளாட்பார்மின் உள்ளேயே காரை கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரு நகரங்களிலும் போக்குவரத்து நெருக்கடியான சமயத்தில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளின் ஓரத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் ப்ளாட்பார்ம்களில் ஆட்டோவை ஓட்டிச்செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: நட்ட நடுரோட்டில் பனியனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. - காரணம் இதுதான்..!


மேலும் படிக்க: Vikram Lander: கொடுக்கப்பட்ட பணியை காட்டிலும் அதிகமாக சாதித்த சந்திரயான் 3.. லேண்டர் மீண்டும் வெற்றிகரமாக தரையிறக்கம்..