மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இந்தியாவில் குரங்கம்மை நோய் நிலைமை, தடுப்பு நடவடிக்கைகள், தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.


உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரங்கம்மை நோய் நிலைமை, தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரம் - குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டா மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.


என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை?


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மிகுந்த எச்சரிக்கையுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், தரை வழி எல்லைப் பகுதிகளில் உள்ள சுகாதார பிரிவுகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சோதனை ஆய்வகங்களை தயார் செய்தல், நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், சிகிச்சைக்கான உரிய சுகாதார வசதிகளை தயார் செய்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பூச்சிகளால் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்திற்கான தேசிய மையம், சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம், மத்திய அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.


அறிகுறிகள் என்ன?


* குரங்கம்மை  நோய்த் தொற்றுகள் பொதுவாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும்.


* பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நீண்டகால நெருங்கிய தொடர்பு, பாலியல் தொடர்பு, உடல் வழியான திரவங்களுடன் தொடர்பு போன்றவற்றின் மூலம் இந்த நோய்த் தொற்று ஏற்படும்.


* காய்ச்சல், தலைவலி , உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கும் சோர்வு, தசைவலி, உடலில் ஆற்றல் இல்லாமை உள்ளிட்டவை அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. 


* சருமத்தில் ஏற்படும் தடிப்பு, அரிப்பு உள்ளிட்டவை முதலில் ஏற்படும் அறிகுறி. முதலில் திட்டுக்களாக ஏற்படுவது பின்னர், வலி மிகுந்து, எரிச்சல் ஏற்பட கூடியதாகவும் மாறும்.


* கைகள், உள்ளங்கை, குதிகால், முகம், வாய், தொண்டை, பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் முதல்நிலை அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.


* தொற்று பரவல் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 


உலக சுகாதார அமைப்பு, முன்னதாக ஜூலை 2022- ல் குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. பின்னர் மே 2023-ல் அதை ரத்து செய்தது.


99,176 பேர் பாதிப்பு


2022 முதல் உலகளவில், 116 நாடுகளில் குரங்கம்மை காரணமாக 99,176 பேர் பாதிக்கப்பட்டனர்.  208 இறப்புகள் பதிவாகின. 


2022ல் அவசர நிலை அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் மொத்தம் 30 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. கடைசியாக மார்ச் 2024-ல் பதிப்பு கண்டறியப்பட்டது.


இந்தியாவில் பரவல் வருமா? 


வரவிருக்கும் வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு சிலருக்கு பதிப்பு கண்டறியப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. என்றாலும், இந்தியாவில் பெரிய பரவலும் அதனால் ஆபத்துகளும் ஏற்படாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Mpox Outbreak: குரங்கு அம்மை வைரஸ் பற்றி தெரியுமா? WHO வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்!