தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்படுகிறது. இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.


கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து கடிதத்தில்,


கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்:


“முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இது ஒரு முக்கியமான நிகழ்வு.


கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த மனிதராக திகழ்ந்தவர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தேச முன்னேற்றத்தில் எப்போதும் நாட்டம் கொண்டவர். ஒரு அரசியல் தலைவராக கருணாநிதி சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய தனது ஆழமான புரிதலை கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக நம் நாட்டு வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர்..






கலைஞருக்கு அஞ்சலி:


பன்முகத் திறமை கொண்ட ஆளுமை, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் அவரது முயற்சிகள் இன்னும் மக்களால் நினைவு கூறப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகள் அவருக்கு கலைஞர் என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.


இந்த நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளதால், கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவர் முன்வைத்த லட்சியங்களை போற்றும் விதமாகவும் இது அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது பண்பு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டும். இந்த முக்கியமான தருணத்தில், கருணாநிதிக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, ​​கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசப் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும். முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்”


இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.


மு.க.ஸ்டாலின் நன்றி:


பிரதமரின் வாழத்துக்கு தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றியடைய வாழ்த்துகளும், ஆதரவும் கூறிய பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.