இதுவரை 116  நாடுகளில் Mpox (குரங்கு அம்மை) தொற்று பரவியதையடுத்து, தொற்று பரவலை  சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


ஆப்பிரிக்கா, காங்கோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் Mpox தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox-யை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக (public health emergency of international concern (PHEIC)) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய Mpox பல்வேறு நாடுகளிலும் பரவியது.  இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் காங்கோ குடியரசில் மட்டும் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காங்கோவின் அண்டை நாடுகளான ருவாண்டா, உகாண்டா, கென்யா மற்றும் புருண்டி போன்ற நாடுகளிலும், clade 1b Mpox நோய் பரவியுள்ளது. மக்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மேற்கண்ட நாடுகளில் வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கோவில் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.


உலக அளவில் தீவிரமாக பரவி வரும் Mpox ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் என்ன, தீர்வு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களின் பதில்களை இக்கட்டுரையில் காணலாம். 


Mpox வைரஸ் தொற்று உருவானது எப்படி?


 ஆங்கிலத்தில்  mpox (formerly known as monkeypox) அல்லது  monkeypox என்று அழைக்கப்படுகிறது. இது வைரஸ் தொற்றால் ஏற்பட கூடிய ஓர் அரிய வகை நோய்.  Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இது முதன் முதலில் காங்கோ குடியரசில் 1970-ம் ஆண்டு மனிதர்களிடையே பரவியது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. 2022-ல் மீண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. 






Mpox வைரஸ் அறிகுறிகள் என்ன?


 இந்த வைரஸில் இரண்டு  மரபியல் பிரிவுகள் உள்ளன. இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.  காய்ச்சல், தலைவலி ,உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கும் சோர்வு, தசைவலி, உடலில் ஆற்றல் இல்லாமை உள்ளிட்டவை அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. 


சருமத்தில் ஏற்படும் தடிப்பு, அரிப்பு உள்ளிட்டவை முதலில் ஏற்படும் அறிகுறி. முதலில் திட்டுக்களாக ஏற்படுவது பின்னர், வலிமிகுந்து, எரிச்சல் ஏற்பட கூடியதாகவும் மாறும். கைகள்,உள்ளங்கை, குதிகால், முகம், வாய், தொண்டை, பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் முதல்நிலை அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தொற்று பரவில் தீவிரத்தை பொருத்து அறிகுறிகள் மாறுபடும். 


தொற்று எவ்வாறு பரவுகிறது?


இந்த நோய் தொற்று ஏற்பட்டவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும். தொற்று பாதிக்கபட்டவை தொடுவது, அவருடைய சுவாசம், அவர் பயன்படுத்திய பொருட்கள், உடலுறவு ஆகியவற்றின் மூலம் தொற்று பரவுகிறது. 


விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கடி, தொற்று பரவிய விலங்குகளை சாப்பிடுவது ஆகியவற்றினால் பரவுகிறது. 


இப்போது பரவும் Mpox தொற்றின் clade 1b என்ற மரபியல் பிரிவு காங்கோவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பிரிவு பரவுவதற்கு  உடலுறவு முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் மரபு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. 


தீர்வு நடவடிக்கை?


பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக நாடுகளின் அரசு விழுப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசி உருவாக்கம், உற்பத்தி ஆகியவற்றை முன்னெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை நடவடிக்கைகாஇ மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. 


தடுப்பூசி கிடைக்கிறதா?


Mpox தொற்று நோய் பரவலை தடுக்கும் நோக்கத்துடன் தடுப்பூசி அவசர கால நடவடிக்கையாக ஃபாஸ்ட் ட்ராக் தடுப்பூசிகளை WHO அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.


நோய் தொற்று பரவலை கண்டறிய, தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்து ஆகியவற்றிற்காக 1.45 மில்லியன் டாலர் தொகையை உலக சுகாதார நிறுவனம் நிதி வழங்கியுள்ளது. இருப்பினும், கூடுதலாக நிதி தேவையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொற்று பரவல் உள்ள நாடுகளில் முதல்நிலை அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்துவது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதை உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நாடுகளின் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்தாண்டு இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.