கோவாவில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது கேபினில் புகை பரவியதால், அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த DGCA உத்தரவிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், புகை ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய விவரங்களைப் பகிர மறுக்கிறது.


விமானத்தில் புகை


கோவாவில் இருந்து கடந்த புதன் கிழமை புறப்பட்ட விமானத்தில் புகை சூழ்ந்ததைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தின் அவசரநிலை வெளியேறும் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். வெளியேறும்போது பயணி ஒருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் 86 பயணிகள் இருந்தனர். விமானம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய ஒன்பது விமானச் சேவைகள் மற்ற விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன. இத்தகைய சலசலப்புக்கு காரணமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் இதற்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.






ஒருவர் காயம்


"Q400 விமானம் அக்டோபர் 12 அன்று அதன் இலக்கில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினார்கள்", என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு பயணி காயமடைந்து ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. "அவருக்கு சிறிய காயம் இருந்தது. மூச்சுத் திணறல் இருப்பதாக புகார் கூறினார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்," என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...


கடவுளை வேண்டச் சொன்னார்கள்


SG 3735 இன் உள்ளே நடந்ததை விவரித்த பயணிகள், தாங்கள் உயிருக்கு பயந்ததாக கூறினர். "அவர்கள் (குழு உறுப்பினர்கள்) எங்களிடம் கடவுளிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னார்கள்... எங்கள் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்... இது மிகவும் வேதனையாக இருந்தது. எனது சக பயணிகள் பலர் பீதியடைந்து அலறத் தொடங்கினர்," என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி நிபுணர் ஸ்ரீகாந்த் எம் பகிர்ந்து கொண்டார். விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் டீவீட்டில் இணைத்திருந்தார்.






நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகள்


ஸ்ரீகாந்த் அவர் நண்பர்களுடன் தனது முதல் விமான பயணத்தை மேற்கொண்டார் என்று குறிப்பிட்டார். DGCA சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்கான 50% வரம்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த ஆண்டு விமானம் தொடர்பான எட்டு சம்பவங்களை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. "கழிவறையில் ஏதோ நடந்தது. குழுவினர் பேசுவதை நாங்கள் கேட்டோம். அடுத்த 20 நிமிடங்களில், எங்களைச் சுற்றிலும் புகை மூண்டது" என்று தனியார் நிறுவன ஊழியர் அனில் பி கூறினார். "விரைவில், விளக்குகள் எரிந்தன, குழுவினர் எங்களை பேசுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர், எங்கள் இருக்கைகளை விட்டு வெளியேற வேண்டாம்எ என்றனர்". விமானம் ஒருவழியாக தரையிறங்கும்போது அவசர கதவுகள் திறந்தவுடன் "குதித்து ஓடுங்கள்" என்று குழுவினர் மக்களை விரட்டியதாக மற்றொரு பயணி கூறினார். "இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மொபைலில் இருந்து டெலிட் செய்யுமாறு விமான ஊழியர்கள் எங்களை வற்புறுத்தினர். நான் மறுத்தபோது அவர்கள் எனது தொலைபேசியை வாங்கிக்கொண்டனர்," என்று ஸ்ரீகாந்த் கூறினார்.