மத்திய அரசு ரயில்வே துறையில் நவீனத்தையும், வேகத்தையும் இணைக்கும் விதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே வந்தே பாரத் ரயில். மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலை நாட்டின் 75 முக்கிய நகரங்களில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


வந்தே பாரத் 


2019ம் ஆண்டு முதன்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதுவரை நாட்டில் 3 வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவில் இதுவரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படவில்லை என்ற குறையை போக்கும் விதமாக சென்னையில் இருந்து பெங்களூர் வரை இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.




சென்னை முதல் பெங்களூர் மற்றும் மைசூரு இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மொத்தம் 483 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


அசர வைக்கும் வேகம் :


நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் அதிக வேகத்தில் செல்லக்கூடியது. பிற ரயில்களை காட்டிலும் இதில் நவீன வசதிகள் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், இணைய வசதிகள், மிகவும் சொகுசான இருக்கை வசதிகள், கழிவறை வசதிகள் ஆகிய உள்ளன.


வந்தே பாரத் ரயிலானது ஒரு நிமிடத்திற்கு உள்ளேயே அதாவது 52 விநாடிகளிலே பூஜ்ஜியம் கிலோமீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். வந்தே பாரத் ரயிலானது டெல்லி  - வாரணாசி, நியூ டெல்லி – ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத், மும்பை சென்ட்ரல் – காந்திநகர் (குஜராத்) மற்றும் டெல்லி முதல் – அம்ப் அந்தாரா ( இமாச்சல பிரதேசம்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.




சென்னையில் இருந்து பெங்களூர் வரை இயக்கப்பட உள்ளதாக வந்தே பாரத் ரயில் மைசூர் வழியாக மங்களூர் வழியாக இயக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், வருங்காலங்களில் டெல்லி – அமிர்தசரஸ், டெல்லி – லக்னோ, கவுரா – ராஞ்சி, மும்பை – புனே, டெல்லி – போபால், பெங்களூர்  முதல் கன்னியாகுமரி, கவுரா – பூரி, எர்ணாகுளம் – பெங்களூர், புனே – பெங்களூர், செகந்திராபாத் – திருப்பதி – பெங்களூர், சென்னை – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சில ரயில்கள் சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட உள்ளது.   


மேலும் படிக்க : 5 மடங்கு பெரியதாகும் சென்னை... விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல்


மேலும் படிக்க : 100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?