டெல்லி மாநகராட்சியின் புதிய மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுத்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றபோது ஏற்பட்ட மோதலில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பலர் டெல்லி குடிமை மையத்தில் ஒருவருக்கொருவர் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசிக் கொண்டது பரபரப்பாகி உள்ளது.


புதிய மேயர் தேர்வு இழுபறி


டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றிய நிலையில் தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது. துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா என்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையால் மேயர் தேர்தலை நடைபெறாமல் இருந்தது. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சி கூற, மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், தொடர்ந்து ஆம் ஆத்மி, பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், ஆம் ஆத்மி மேயர் வேட்பாளரான ஷெல்லி ஓப்ராய் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17-ந்தேதி அளித்த தீர்ப்பில், மாநகராட்சி தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் 24 மணி நேரத்துக்குள் மாநகராட்சி கூட்டத்தை நடத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட வேண்டும் எனவும் அறிவித்தனர்.



வெற்றி பெற்ற ஆம் ஆத்மி


இதனை தொடர்ந்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டத்தை பிப். 22-ந்தேதி நடத்துவதற்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி டெல்லி குடிமை மையத்தில் நேற்று காலையில் மாநகராட்சி கூட்டம் கூடிய நிலையில், மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி தரப்பில் ஷெல்லி ஓப்ராயும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் போட்டியிட்டனர். மொத்தம் 266 வாக்குகள் பதிவாகிய நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் 150 வாக்குகள் பெற்று வென்றார். பா.ஜனதாவின் ரேகா குப்தா 116 ஓட்டுகளை பெற்றார். 34 வாக்குகள் வித்தியாசத்தில் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்: “கன்னத்தில் அறைந்ததால் கோபம் வந்துவிட்டது” - கணவரை 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!


நிலைக்குழு தலைவர்கள் தேர்தல்


இதனால் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் நேற்று இரவு நடந்த நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகம் இருந்ததால் பாஜக கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடமால் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜனதா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. நிலைமை மிகவும் குழப்பமானதாக மாறியது, கவுன்சிலர்கள் வாக்குப் பெட்டிகளை கிணற்றில் வீசத் தொடங்கினர். சிலர் மற்றவர்களை தள்ளுவதையும் சிலர் அடிப்பதையும் விடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு சில பாஜக உறுப்பினர்கள், தங்கள் சக கட்சி கவுன்சிலர்கள் சிலர் காற்றில் வீசப்பட்ட பொருட்களால் தாக்கப்பட்டதாகக் கூறினர்.






பாட்டிலை வீசிக்கொண்டு மோதல்


அதே நேரத்தில் மேயர் ஷெல்லி ஓபராய், நிலைக்குழுவின் ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளின் போது சில பாஜக கவுன்சிலர்கள் தன்னைத் தாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார். 'ஒரு பெண்ணை தாக்க முயல்வதில் இருந்து அறிந்து கொள்ளலாம் பாஜக-வின் போக்கிரித்தனத்தை' ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில் அவர் மேற்கோள் காட்டினார். இச்சம்பவம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நடவடிக்கைகளை ஒத்திவைத்த நேரத்தில் இது நடந்தது. இரு கட்சிகளைச் சேர்ந்த பலர், முனிசிபல் ஹவுஸ் அறையில் ஒருவரையொருவர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பழங்களை வீசினர். முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு பதிலளித்து, "இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார். பாஜக மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா நள்ளிரவு கடந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தி இன்று நடந்த சம்பவத்திற்கு ஆம் ஆத்மி கட்சியையும் கெஜ்ரிவாலையும் கடுமையாக சாடினார்.